தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை)
பொதுக்காலத்தின் 23 ஆம் வியாழன்
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா 08 09 2022
திருப்பலி முன்னுரை
அற்புதமான திருவிழா. அன்னையின் திருவிழா. அன்னைக்கு பிறந்த நாள் விழா. கொண்டாட வந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அன்னையின் நாமம் கொண்ட நல்உள்ளங்களுக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள்.
பெண் சிசுக்களை பாதுகாப்போம் என்ற உறுதிப்பாட்டோடு விழாவை கொண்டாட அழைக்கப்படுகின்றோம். இந்த அழைப்பு காலத்தின் கட்டாயம். பெண்ணைப் பெற்றதால், பெண்ணை வெறுக்கும் சமுதாயம். அந்த பெண்ணால்தானே தாங்கள் பிறப்பெடுத்தோம் என்பதனை வெகுதிறமையாக மறந்து விடுகின்ற இந்த மனிதத்தை என்னவென்று சொல்லுவது.
கருவறையை கல்லறையாக்கி விட்டு, கருக்கலைப்பு செய்து விட்டு, வாழ வரும் சிசுவின் உரிமையை பறித்து கொண்டு, வயிற்றின் கனியை கொடையாக தரும், இறை பரிசை உதாசீனப்படுத்தி விட்டு, அன்னையே, தாயே, அம்மா, ஆரோக்கியத் தாயே, அடைக்கலம் தாருமம்மா என்று அழைப்பதனால் யாரை ஏமாற்ற பார்க்கின்றோம்.
ஆணோ பெண்ணோ, பாகுபாடு வேறுபாடு இன்றி, இறைவன் தரும் பரிசையேற்று, வாழ வரும் சிசுவின் உரிமையை பேணி பெண்சிசுக்கள் வாழ வழிகாணுவோம். அதுவே ஆரோக்கியமான சமூகத்திற்கு உகந்தது.
அந்த ஆரோக்கிய அன்னையின் பிறப்பு எல்லாருக்கும் மீட்பு தர உதவியது போல, நம்முடைய பிறப்பின் வழி இறைவன் விரும்பும் திருவுளம் அறிந்து செயலாற்ற முன்வருவோம். பிறப்பை அர்த்தமுள்ளதாக்குவோம். அப்பொழுது நம் கொண்டாட்டங்கள் நிறைந்த மகிழ்வு தரும். நம்முடைய யாத்திரை, நம்முடைய நேர்ச்சைகள், நாம் செலுத்தும் காணிக்கைகள் மிகுந்த பலனையும், பயனையும் தரும்.
மன்றாட்டுக்கள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. அன்னையின் மைந்தனே இறைவா! திருஅவை முன்னெடுக்கும் எல்லா நல்ல காரியங்களிலும், அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க ‘அவர் சொல்லுவது போல’ நீர் விரும்புவது போல செயலாற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்னையின் மைந்தனே இறைவா! அர்ப்பண அன்பர்கள் அதன் அர்த்தத்தின் முழுமையை உணர்ந்து, முழு மனித குல மீட்புக்காக அர்ப்பணித்து வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்னையின் மைந்தனே இறைவா! குடும்பத்தின், திருமணத்தின் மாண்பினை காத்து, எல்லா வியாகுலங்களிலும், பிரமாணிக்கம் தவறாது பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்னையின் மைந்தனே இறைவா! பெண்மையை போற்றி மதித்து, பெண்சிசுக்களும் சமூகத்தில் வாழ உரிமை பெற்றவர்களே என்பதனை உணர்ந்து, கரு அழிப்பு, கலைப்பு செய்யாது நீர் தரும் பரிசினை போற்றி பாதுகாத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அன்னையின் மைந்தனே இறைவா! பிறப்பு கொடை, பரிசு, செல்வம் என்பதனை உணர்ந்து அறிந்து, பிறப்பின் அர்த்தம் நிலைநாட்டப்பட, உமது திருவுளம் அறிந்து நடந்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
முதல் வாசகம்
இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a
ஆண்டவர் கூறுவது:
நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.
அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30
சகோதரர் சகோதரிகளே,
கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-23
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா
"அன்னை மரியின் பிறப்பு நம் அனைவருக்கும் சிறப்பு "
பிறப்பு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் ஒருவிதமான மகிழ்ச்சி நம் உள்ளத்தில் தோன்றும். பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாகட்டும் என்பார்கள். பிறப்பு என்பது நமது கையில் இல்லை .இறப்பு என்பதும் நமது கையில் இல்லை. ஆனால் வாழுகின்ற வாழ்க்கை நமது கையில் இருக்கிறது. அன்னை மரியாள் தன் பிறப்புக்கு தன்னுடைய வாழ்வின் வழியாக பெருமை சேர்த்துள்ளார். அன்னை மரியாள் ஒருவேளை மீட்பு திட்டத்திற்கு கையளிக்கவில்லையென்றால், நிச்சயமாக அவரின் பிறப்பு நம்மால் பேசப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அன்னை மரியாள் தன்னை மீட்பின் கருவியாக கடவுளிடம் கையளித்து அதன் வழியாக பிறப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் மூன்று நபர்களுக்கு மட்டும் தான் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள் மற்றும் திருமுழுக்கு யோவான் ஆகியோரே அந்த மூவர். இந்தப் பிறப்பு விழா நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால் நம்முடைய பிறப்பின் நோக்கத்தை அறிந்து கடவுளின் திருவுளத்திற்கு நம்மை கையளிப்பதாகும். அன்னை மரியாள் தன்னையே முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்து இறைவனின் திட்டப்படி வாழ்ந்த காரணத்தினால், கடவுள் அவரை உயர்த்தினார்.
கடவுள் அன்னை மரியாவை உயர்த்தியதற்கு காரணங்கள் இருக்கின்றன. அன்னை மரியாவின் தாழ்ச்சி முதல் காரணமாகும். முதல் தாயான ஏவாள் கடவுளின் கட்டளைக்கு கீழ்படியாமல் பாவம் செய்து சாத்தானுக்கு அடிமையானார். ஆனால் அன்னை மரியாள் "இதோ ஆண்டவரின் அடிமை " என்று கடவுளின் திட்டத்திற்கு தன்னையே முழுவதுமாக கையளித்து கடவுளின் பார்வையில் உயர்வான செயலைச் செய்தார். எனவே கடவுள் அவரை தாழ்நிலையிலிருந்து உயர்த்தினார் .
அன்னை மரியாவின் சீடத்துவ வாழ்வு இரண்டாவது காரணமாகும். என்னதான் ஆண்டவர் இயேசுவுக்கு அன்னைமரியாள் தாயாக இருந்தாலும், அன்னை மரியாள் இயேசுவின் உண்மைச் சீடராக இருந்தார். அவரை கருவில் சுமந்தது முதல் கல்வாரிப் பயணத்தில் உடன் நடந்தது வரை இயேசுவின் உண்மைச் சீடராக திகழ்ந்தார். அதன் பொருட்டு தான் சந்தித்த அனைத்து துன்பங்களையும் எதிர் கொண்டார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார்.
தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை மூன்றாவது காரணமாகும். அன்னை மரியாள் இயல்பிலேயே உதவி செய்யக்கூடிய நல்ல மனநிலையைக் கொண்டிருந்தார். எனவேதான் வயதான எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்ய விரைந்து சென்றார். கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போன பொழுது தன் மகனிடம் பரிந்து பேசி உதவி செய்தார். இப்படிப்பட்ட உதவி செய்யக்கூடிய மனநிலை அன்னை மரியாவிடம் அதிகமாக இருந்தது. எனவே கடவுள் அவரை உயர்த்தினார்.
அன்னை மரியாவின் தூய்மை வாழ்வு நான்காவது காரணமாகும். அன்னை மரியாள் தன் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தார். தன்னுடைய கற்பை கடவுளுக்கு முழுமையாக கையளித்தார். சிற்றின்பகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிலை வாழ்வைக் கொடுக்கும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார்.
அன்னை மரியாவின் ஆழமான இறைநம்பிக்கை ஐந்தாவது காரணமாகும். இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளும் பொழுது கடவுளால் உயர்த்தப்படுவோம் என்பதற்கு அன்னை மரியாள் ஒரு முன்னுதாரணம். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதை ஆழமாக நம்பித்தான் இறைத் திட்டத்திற்கு தன்னையே முழுமையாக கையளித்து சாட்சியமுள்ள மீட்பின் தாயாக உயர்ந்தார். கடவுளும் அவரை மீட்பரின் தாயாக உயர்த்தினார்.
அன்னை மரியாவின் பிறப்பு விழாவை ஆரோக்கிய அன்னையின் பெருவிழா என்று நம் தமிழகத்தில் கொண்டாடி மகிழ்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அன்னை மரியாவின் பிறப்பு விழா வந்து செல்கிறது. ஆனால் அந்த பிறப்பு பெருவிழாவில் நாம் என்ன மதிப்பீடுகளை கற்று வருகிறோம் என்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். மேற்கூறிய ஐந்து மதிப்பீடுகளையும் நம்முடைய வாழ்க்கையிலே வாழ்வாக்க முயற்சி செய்யும்பொழுது, நாமும் அன்னை மரியாவைப் போல கடவுளால் உயர்த்தப்படுவோம். எனவே ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழாவில் அன்னை மரியாவின் மதிப்பீடுகளை வாழ்வாக்க தேவையான அருள் வேண்டுவோம். அப்பொழுது நம்முடைய பிறப்பும் சரித்திரமாக மாறும்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! அன்னை மரியாவின் பிறப்பு எங்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க தேவையான அருளைத் தாரும். அன்னை மரியாள் கொண்டிருந்த நல்ல மதிப்பீடுகளை வாழ்வாக்கி, சாட்சியமுள்ள வாழ்வு வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
--------------------------
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment