பொதுக்காலம் 24ஆம் வாரம் - சனி
காலைப் புகழ்
முதல்: ஆண்டவரே, எங்கள் இதழ்களைத் திறந்தருளும்.
எல்: எம் வாய் உம் புகழ்தனை எடுத்துரைக்கும்.
அழைப்புத் திருப்பாடல்
பல்லவி: ஆண்டவரது குரலுக்குச் செவிகொடுத்து, அவரது அமைதிக்குள் நுழைவோம்.
ஆண்டவரின் கோவிலில் நுழைவோரின் மகிழ்ச்சிக் கீதம்
திபா 100
‘ஆண்டவர் தாம் மீட்டுக்கொண்ட அனைவரையும் வெற்றிக் கீதம் பாட அழைக்கிறார்’. (புனித அத்தனாசியார்)
அனைத்துலகோரே!
ஆண்டவரைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்களாவோம்,
அவர் மேய்க்கும் ஆடுகளாவோம்.
நன்றியோடு அவர் தம் திருவாயில்களில் நுழையுங்கள்!
புகழ்ப்பாடலோடு அவர் தம் முற்றத்திற்கு வாருங்கள்!
அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப்
போற்றுங்கள்!
ஏனெனில் ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
பல்லவி: ஆண்டவரது குரலுக்குச் செவிகொடுத்து, அவரது அமைதிக்குள் நுழைவோம்.
பாடல்
மீண்டும் மற்றொரு நாளிதோ விடிந்தது,
ஆண்டவன் புகழை ஆர்வமாய்ப் பாடி
நிறைந்த உளத்துடன் உயர்ந்த குரலில்
கிறிஸ்துவைப் போற்றி நன்றி நவில்வோம்.
அவர்வழி யாகவே அனைத்தும் உண்டாயின,
அவரே இரவையும் பகலையும் அமைத்தார்;
அவரே நமக்கு உண்மை ஒளியாம்,
அவரே நமக்கு நிலையான ஒளியாம்.
நேயரெம் வேண்டல் ஏற்பீர், தந்தாய்,
உயர்நிலை வீற்றிருக்கும் உம்மகனும்
அச்சம் அகற்றும் ஆவியருடன்
இச்செகம் என்றும் ஆளுகவே. ஆமென்.
திருப்பாடல்கள்
மு. மொ. 1: உன்னதரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று; காலையில் உமது பேரன்பையும் எடுத்துரைப்பது நன்று.
படைத்த ஆண்டவருக்குப் புகழ்ச்சி
திபா 92
“கடவுளின் ஒரே மகனின் செயல்கள் போற்றப்படுகின்றன” (புனித அத்தனாசியார்).
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று;
உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
காலையில் உமது பேரன்பையும்
இரவில் உமது சொல்லுறுதியையும்
பத்துநரம்பு வீணையோடும் தம்புரு.
சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.
ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால்
என்னை மகிழ்வித்தீர்;
உம் செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன்.
ஆண்டவரே! உம் செயல்கள்
எத்துணை மேன்மையானவை!
உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை!
அறிவிலிகள் இவற்றை அறிவதில்லை;
மூடர் இவற்றை உணர்வதில்லை:
பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்;
தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்!
ஆனால் அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே;
நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர்.
ஏனெனில், ஆண்டவரே!
உம் எதிரிகள் அழிந்தேபோவார்கள்.
தீமை செய்வோர்கள் அனைவரும்
சிதறுண்டுபோவார்கள்.
காட்டெருமையின் வலிமையை எனக்கு அளித்தீர்;
புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.
என் எதிரிகளின் வீழ்ச்சியை என் கண்கள் கண்டன;
எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை
என் காதுகள் கேட்டன.
நேர்மையாளர் போரீச்சையெனச் செழித்தோங்குவர்;
லெபனோனின் கேதுருவெனத் தழைத்தோங்குவர்.
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர்
நம் கடவுளின் கோவில் முற்றாங்களில் செழித்தோங்குவர்.
முதிர் வயதிலும் அவர்கள் கனி தருவார்கள்;
செழுமையும் பசுமையுமாய் என்றும் இருப்பார்கள்;
ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை;
அவரிடம் அநீதி ஏதுமில்லை
என்று அவர்கள் அறிவிப்பார்கள்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : உன்னதரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று; காலையில் உமது பேரன்பையும் எடுத்துரைப்பது நன்று.
மு. மொ. 2: நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்; புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
இறைவன் தம் மக்களுக்குப் புதுவாழ்வு அளிப்பார்
சிறுபாடல்
எசே 36: 24-28
“அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்” (திவெ 21:3).
நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து,
பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து,
உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.
நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும்
தூய்மையாவீர்கள்;
உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத்
தீட்டையும் அகற்றுவேன்.
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்;
புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை
எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப்
பொருத்துவேன்.
என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும்
என் நீதிநெறிகளைக் கவனமாய்ச்
செயல்படுத்தவும் செய்வேன்.
நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில்
நீங்கள் வாழ்வீர்கள்.
அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்;
நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்; புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
மு. மொ. 3: ஆண்டவரே, பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர்.
இறைவனின் மாட்சியும் மனிதனின் மேன்மையும்
திபா 8
“அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார்” (எபே 1:22).
ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும்
எவ்வளவு சிறந்து விளங்குகின்றது!
உமது மாட்சியை வானங்களுக்கு மேலாக
நிலைபெறச் செய்தீர்.
பாலகரின் நாவினிலும் குழந்தைகளின் மழலையிலும்
வலிமையை உறுதிப்படுத்தி, உம் பகைவரை ஒடுக்கினீர்;
எதிரியையும் பழிவாங்குவோரையும்
எளிதாய் அடக்கினீர்.
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும்
விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மானிடரை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் யார்? என்று எண்ணனத் தோன்றுகிறது!
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே
சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
உமது கை படைத்தவற்றை
அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;
அனைத்தையும் அவர்கள் பாதங்களுக்குக்
கீழ்ப்படுத்தியுள்ளீர்.
ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்
அனைத்தும் அவர்களுக்குப் பணியவைத்தீர்.
வானத்துப் பறவைகள், கடல் மீன்கள்,
ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள்
அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர்
உலகெங்கும் எவ்வளவு சிறந்து விளங்குகின்றது!
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர்.
அருள்வாக்கு
2 பேது 3: 13-15அ
அவர் வாக்களித்தபடியே நீதி குடி கொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர் பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக கருதுங்கள்.
சிறு மறுமொழி
முதல்: நான் உம்மைப் புகழும்போது என் இதழ்கள் பேருவகை கொள்ளும்.
எல்: நான் உம்மைப் புகழும்போது என் இதழ்கள் பேருவகை கொள்ளும்.
முதல்: என் நா உம் நீதியை எடுத்துரைக்கும்.
எல்: நான் உம்மைப் புகழும்போது என் இதழ்கள் பேருவகை கொள்ளும்.
முதல்: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: நான் உம்மைப் புகழும்போது என் இதழ்கள் பேருவகை கொள்ளும்.
செக்கரியாவின் பாடல்
மு. மொ. : ஆண்டவரே எங்கள் கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்தருளும்.
லூக் 1: 68-79
மெசியாவையும் அவருக்கு முன் அனுப்பப்பட்டவரையும் பற்றியது.
இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரைப் போற்றுவோம்
எனெனில் அவர்தம் மக்களைத்
தேடிவந்து விடுவித்தருளினார்.
தும் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர்
நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு
அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து
விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு
ஒளிதரவும்,
நம்முடைய கால்களை
அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே எங்கள் கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்தருளும்.
மன்றாட்டுகள்
கடவுளுடைய கொடை பயப்படும் மனப்பான்மையல்ல; மாறாக, வல்லமையும் அன்பும் சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியாகும். எனவே, முழு நம்பிக்கையோடு நாம் வேண்டுவோம்.
எல்: தந்தையே உம் ஆவியாரை எங்களுக்கு அனுப்பியருளும்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி — கிறிஸ்துவில் நீர் எங்களுக்கு எல்லா ஆன்மீக ஆசியையும் கொடுத்துள்ளீர்.
தூயஆவியாரின் வல்லமையால் மரியா கிறிஸ்துவை உலகிற்குக் கொடுத்தார் — திருச்சபையின் வழியாக இன்று கிறிஸ்து மீண்டும் மனித உள்ளங்களில் பிறப்பாராக.
தந்தையே, உமது தூய ஆவியார் எங்களைத் தனிமையிலிருந்து வெளிக்கொணர்வாராக — குருடாகளுக்குப் பார்வை கொடுக்கவும் ஒளியின் வார்த்தையைப் பறைசாற்றவும் வாழ்வின் நிறைவை நாங்கள் ஒருசேரக் கண்டுகொள்ளவும் அவர் எங்களை வழிநடத்திச் செல்வாராக.
உமது ஆட்சிக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் சுயநலத்தாலோ அச்சத்தாலோ குன்றிவிடாமல் இருப்பதாக — படைப்பனைத்தும் தூயஆவியாரால் புத்துயிர் பெறவும் எங்கள் இல்லங்களெகல்லாம் மீட்படைந்த உலகிற்குச் சான்று பகரவும் அருள்புரிவீராக.
ஆண்டவரின் இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.
இறுதி மன்றாட்டு
என்றும் வாழும் எல்லாம் வல்ல கடவுளே. உண்மை ஒளி, நிலைவாழ்வு இவற்றிக் பெருஞ்சுடரே, இக்காலை வேளையில் பாவ இருளை அகற்றி, உமது திருவருகையின் மகிமையால் எம் உள்ளங்களை நிரப்பியருளும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
நண்பகல் இறைவேண்டல்
முதல்: இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.
பாடல்
வல்ல அரசரே, உண்மைக் கடவுளே,
எல்லாக் காலச் சுழற்சியை அமைத்தீர்,
தண்ணொளியைக் காலைப் பொழுதிற்(கு) தந்தீர்,
நண்பகல் வேளையில் வெப்பம் தந்தீர்.
பற்றி எரியும் பகைமையை அணைப்பீர்,
குற்றங் குறைகளின் வெப்பம் தணிப்பீர்,
உமது காவலை உடலுக்கு அளிப்பீர்,
எமக்கு உள்ள அமைதியை அருள்வீர்.
தந்தையே, அன்பு மிகுந்த இறைவனே,
தந்தைக்கு இணையான ஒரேதிருப் புதல்வரே,
ஆறுதல் அளிக்கும் தூயநல் ஆவியாரே,
ஆண்டாண்டு காலம் புகழ்பெற்(று) ஆள்வீர்,
ஆமென்.
திருப்பாடல்கள்
மு. மொ. 1: உம் கரம் எனக்குத் துணையாயிருப்பதாக; உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.
திபா 119: 169-176
ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக!
உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு
புகட்டுவீராக!
என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!
உம் வாக்குறுதியின்படி என்னை விடுவித்தருளும்.
உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால்,
என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.
உம் வாக்கைக்குறித்து என் நா பாடுவதாக!
ஏனெனில் உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.
உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக!
ஏனெனில் உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.
ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை
நான் நாடுகின்றேன்;
உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சியுறுகிறேன்.
உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக!
உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!
காணாமற்போன ஆட்டைப் போல்
நான் அலைந்து திரிகின்றேன்;
உம் ஊழியனைத் தேடிப்பாரும்;
ஏனெனில் உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : உம் கரம் எனக்குத் துணையாயிருப்பதாக; உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.
மு. மொ. 2: இறைவனே என்றும் உள்ளது உமது அரியணை.
அரசத் திருமணப்பாடல்
திபா 45: 1-9
நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்தகுரல் ஒலித்தது. (மத் 25:6)
Ⅰ
மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்றபோழ்து;
இனியதொரு செய்தியால் என்நெஞ்சம்
ததும்பி வழிகின்றது;
திறமிகு கவியின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே!
மானிட மைந்தருள் எழில்மிக்கவர் நீர்;
உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்துவரும்;
என்றென்றும் கடவுள் உமக்கு ஆசி வழங்கியுள்ளார்.
வீரமிகு மன்ன!
மாட்சியோடு உம் மாண்பும் துலங்கிடவே,
உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!
உண்மையைக் காத்திட, நீதியை நிலைநாட்டிட,
மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்!
உம் வலக்கை அச்சந்தரு செயல்களை ஆற்றுவதாக!
உம்முடைய கணைகள் கூரியன;
மன்னர் தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன;
மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்,
இறைவனே, என்றுமுளது உமது அரியணை;
உமது ஆட்சியின் செங்கோல் நேர்மையின் செங்கோல்.
நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு;
எனவே கடவுள், உம் கடவுள்,
மகிழ்ச்சித் தைலத்தால் உமக்குத் திருப்பொழிவு செய்து,
உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார்.
நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணம்
உம் ஆடையெலாம் கமழும்;
தந்தம் இழைத்த மாளிகைதனிலே
யாழிசை உம்மை மகிழ்விக்கும்,
அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்;
ஓபீரின் பொன் அணிந்து
வலப்புறம் நிற்கின்றார் பட்டத்து அரசி!
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : இறைவனே என்றும் உள்ளது உமது அரியணை.
மு. மொ. 3: நான் புதிய எருசலேமைக் கண்டேன், அது தன் மணமகனுக்காகத் தன்னையே அணிசெய்து கொண்ட மணமகனைப் போல் ஆயத்தமாயிருந்தது.
திபா 45: 10-17
Ⅱ
கேளாய் மகளே!
கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்!
உன் இனத்தாரை மறந்துவிடு;
உன் பிறந்தகம் மறந்துவிடு.
உனது பேரெழில் நாட்டங் கொள்வார் மன்னர்;
உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு!
தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;
செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி வருவர்;
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி
தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை
அழைத்து வருவர்;
கன்னித் தோழியரும் புடைசூழ்ந்து மன்னரிடம் வந்திடுவர்.
அவள் அடியெடுத்து வந்திடுவாள்.
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது
மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்
அவர்கள் அழைத்து வரப்படுவர்.
உம் தந்தையரின் அரியணையில்
உம் மைந்தரே வீற்றிருப்பர்;
அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர்.
என் பாடல் வழிவழியாய் உம் பெயரை
நிலைக்கச் செய்யும்;
எனவே எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : நான் புதிய எருசலேமைக் கண்டேன், அது தன் மணமகனுக்காகத் தன்னையே அணிசெய்து கொண்ட மணமகனைப் போல் ஆயத்தமாயிருந்தது.
அருள்வாக்கு
உரோ 15: 5-7
கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒரு வாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள். ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே.
முதல்: ஆண்டவர் தம் மக்களில் பெருமகிழ்ச்சி கொள்கிறார்.
எல்: ஏழைகளை மீட்பால் அணி செய்கிறார்.
இறுதி மன்றாட்டு
ஆண்டவராகிய கடவுளே, நிலையன்பின் உயிருள்ள ஒளியே, நாங்கள் அன்பின் ஆர்வத்தால் தூண்டப்பட்டு எப்பொழுதும் அனைத்திற்கு மேலாக உம்மையும் உம் பொருட்டு எம் சகோதரர் சகோதரிகளையும் அன்பு செய்ய வரமருள்வீராக. எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
மாலைப் புகழ்
முதல்: இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.
பாடல்
வானமும் வையமும் படைத்தாளும்
ஞானம் நிறைந்த இறையவனே,
அழகிய ஒளியால் பகலினையும்
துயிலுற இரவையும் அமைத்தவனே.
முடங்கின தசைகள் முறுக்கேறி
திடமுடன் உழைக்கத் துயில்தேவை;
சோர்ந்த உளத்தை தேற்றிடுமே,
தீர்ந்து போகும் துயர்களுமே.
கடந்த நாளுக்காக நன்றிகூறி
தொடங்குவோம் இரவை வேண்டலுடனே;
பாவிகள் எம்மைப் பொறுத்தருள
தேவா, இசையுடன் இறைஞ்சுகிறோம்.
இதயத் தாழத்தில் உமைப்புகழ,
உதடும் இணைந்து உமைப்பாட,
கள்ளமற்ற உள்ளத்தை உமக்களித்து
வள்ளல் உம்மை வணங்கிடுவோம்.
இரவின் காரிருள் பகலைஇப்போ
மறைக்கும் வேளை வந்தாலும்
எம்நம் பிக்கை இருளடையா(து)
உம்ஒளி இரவிலும் ஒளிர்ந்திடுக.
அகத்தினை ஆளும் தந்தாய், உம்முடனே
மகனையும் தூயஆவி யாரையும்
வேண்டு கிறோம் அருள்பாலிக்க;
யாண்டும் புகழ்உரித் தாகுக. ஆமென்.
திருப்பாடல்கள்
மு. மொ. 1: ஆண்டவரே, தூபம்போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக.
இடுக்கண்ணுற்ற வேளையில் மன்றாட்டு
திபா 141: 1-9
‘அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதாதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது’. (திவெ 8:4).
ஆண்டவரே!
நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.
உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது
என் குரலுக்குச் செவி சாய்த்தருளும்.
தூபம் போல் என் மன்றாட்டு
உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!
மாலைப்பலிபோல் என் கைகள்
உம்மை நோக்கி உயர்வனவாக!
ஆண்டவரே! என் நாவுக்குக் காவல் வைத்தருளும்;
என் இதழ்களின் வாயிலைக் காத்தருளும்.
தீயது எதையும் என் இதயம் நாடவிடாதேயும்;
தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;
தீச்செயல் செய்யும் மனிதரோடு
என்னைச் சேரவிடாதேயும்;
அவர்களோடு இனிய விருந்தினை
நான் உண்ண விடாதேயும்.
நீதிமான் என்னைக் கனிவோடு தண்டிக்கட்டும்;
அது எனக்கு நல்லது.
அவர் என்னைக் கண்டிக்கட்டும்;
அது என் தலைக்கு எண்ணெய்போல் ஆகும்;
ஆனால் தீயவரின் எண்ணெய் என்றுமே
என் தலையில் படாமல் இருக்கட்டும்;
ஏனெனில் அவர்கள் செய்யும் தீமைகளுக்கு எதிராய்
நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.
நீதிபதிகளிடம் அவர்கள்
தண்டனைக்கென ஒப்புவிக்கப்படும்பொழுது,
நான் சொன்னது எவ்வளவு உண்மையானது என்று
அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்;
ஒருவரால் பாறை பிளந்து சிதறடிக்கப்படுவதுபோல்,
எங்கள் எலும்புகளும் பாதாளத்தின் வாயிலில்
சிதறடிக்கப்படும் என்பார்கள்.
ஏனெனில் என் தலைவராகிய ஆண்டவரே!
என் கண்கள் உம்மை நோக்கியே இருக்கின்றன;
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;
நான் அழியவிடாதேயும்.
அவர்கள் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும்
தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்தும்
என்னைப் பாதுகாத்தருளும்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, தூபம்போல் என் மன்றாட்டு உம் திருமுன் ஏற்றுக் கொள்ளப்படுவதாக.
மு. மொ. 2: ஆண்டவரே, நீரே என் அடைக்கலம். உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு.
நீரே என் புகலிடம்
திபா 142
‘ஆண்டவருடைய பாடுகளின்போது இவை எல்லாம் நிறைவுற்றன’ (புனித ஹிலாரி).
ஆண்டவரை நோக்கி நான் கூக்குரலிடுகின்றேன்;
உரத்த குரலில் ஆண்டவரிடம் கெஞ்சிக் கேட்கின்றேன்.
என் மனக்குறைகளை
அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;
அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்.
என் மனம் சோர்வுற்றிருக்கையில்
நான் செல்லும் வழியை நீர் அறிந்தேயிருக்கின்றீர்;
நான் செல்லும் வழியில்
அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
வலப்புறம் பார்க்கின்றேன்;
என்னைக் கவனிப்பார் எவருமிலர்;
எனக்குப் புகலிடம் இல்லாமற்போயிற்று;
என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.
ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;
நீரே என் அடைக்கலம்.
உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு.
என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;
ஏனெனில் நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்;
என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து
எனக்கு விடுதலை அளித்தருளும்;
ஏனெனில் அவர்கள் என்னை விட வலிமைமிக்கோர்.
சிறையினின்று என்னை விடுவித்தருளும்;
உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்;
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்;
ஏனெனில் நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, நீரே என் அடைக்கலம். உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு.
மு. மொ. 3: ஆண்டவராகிய இயேசு தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே, கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.
கிறிஸ்து இறை ஊழியன்
சிறுபாடல்
பிலி 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை
வலிந்து பற்றிக்கொண்டிருக்க
வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
ஆனால் தம்மையே வெறுமையாக்கி
அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.
மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி,
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.
ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர்,
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என
எல்லா நாவுமே அறிக்கையிடும்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவராகிய இயேசு தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே, கடவுளும் அவரை மிகவே உயர்த்தினார்.
அருள்வாக்கு
உரோ 11: 31-36
கடவுளின் அருள் செல்வம், எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும், எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள், ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! “ஏனெனில், ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என, முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
சிறு மறுமொழி
முதல்: ஆண்டவரே, உமது செயல்கள் எத்துணை மேன்மையானவை.
எல்: ஆண்டவரே, உமது செயல்கள் எத்துணை மேன்மையானவை.
முதல்: உமது ஞானத்தால் அவை அனைத்தையும் நீர் உருவாக்கினீர்.
எல்: ஆண்டவரே, உமது செயல்கள் எத்துணை மேன்மையானவை.
முதல்: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: ஆண்டவரே, உமது செயல்கள் எத்துணை மேன்மையானவை.
கன்னிமரியாவின் பாடல்
மு. மொ. : நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்.
லூக் 1: 47-55
என் ஆன்மா ஆண்டவரில் களிகூருகின்றது.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக்
கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கிஎறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே
அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில்கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : நீங்களும், என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்.
மன்றாட்டுகள்
தந்தை, மகன், தூய ஆவியாராகிய ஒரே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. அவரிடம் நாம் தாழ்மையுடன் மன்றாடுவோம்.
எல்: ஆண்டவரே, உம் மக்களோடு இருந்தருளும்.
எல்லாம் வல்ல தந்தையே, எம் உலகிற்கு நீதியை கொண்டு வந்தருளும் — இதனால், மக்கள் உம் அமைதியின் மகிழ்ச்சியில் வாழ்வார்களாக.
மக்களினத்தார் அனைவரையும், உமது ஆட்சிக்குள் கொண்டு வாரும் — இவ்வாறு மானிட இனம் அனைத்தும் மீட்படைவதாக.
தம்பதியர்க்கு உமது அமைதியின் ஆற்றலை அளித்து உமது திருவுளத்தின்படி அவர்களை வழிநடத்தும் — நிலையான அன்பில் அவர்கள் ஒன்றித்து வாழவும் அருள்புரியும்.
எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நீரே பரிசாய் இருப்பீராக அவர்களுக்கு நிலைவாழ்வையும் வழங்குவீராக.
போரிலும் வன்முறையிலும் தங்கள் வாழ்வை இழந்தவர்கள் மீது இரக்கமாயிரும் — அவர்களை உமது இளைப்பாற்றியிலும் ஏற்றருளும்.
ஆண்டவரின் இறைவேண்டல்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்.
இறுதி மன்றாட்டு
அமைதியை அருள்பவரும் அன்பினை விரும்புபவருமான தந்தையே! உம்மை அன்பு செய்வதிலும் எமக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு செய்வதிலும் திருச்சட்டமெல்லாம் அடங்கியிருக்கச் செய்தீரே; நாங்கள் இந்த அன்பின் கட்டளைகளைக்பகு கடைபிடித்து நிலைவாழ்விற்கு வந்து சேர அருள்புரியும். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில், கடவுளாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் மகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து, தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
இரவு இறைவேண்டல்
முதல்: இறைவா, எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே, எமக்குத் துணைபுரிய விரைந்து வாரும்.
தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென், அல்லேலூயா.
பாடல்
பாரினை எல்லாம் படைத்தாள் இறைவா,
காரிருள் புகஉம் கழலினைத் தொழுதோம்;
பேரருள் புரிந்து எம்மீது) இரங்கிக்
கோரிடும் எம்மைக் காத்தருள் வீரே.
கனவிலும் எமதுளம் உம்மையே நாடுக,
நினைவிலாத் துயிலிலும் உமமையே உணர்க;
நனிசேர் புதுநாள் புலரும் போதும்
இனியவும் புகழை இசைத்தேத் திடுக.
இன்பமார் வாழ்வை எமக்களித் திடுக
அன்பனல் எமக்குள் கனன்றிடச் செய்க
துன்பமும் துயரமும் தரும்கார் இருளை
உன்பெரும் ஒளியில் சுடர்போக் கிடுக.
இறைவா, எல்லாம் வல்ல தந்தாய்
மகன்வழி யாய்எமக் கிவை அருள்வாய்
ஒருபொருள் தந்தை மகன் தூய ஆவியார்
தரைதனில் ஆட்சியும் மாட்சியும் பெறுக. ஆமென்.
திருப்பாடல்கள்
மு. மொ. 1: ஆண்டவரே, எனக்கு இரங்கி என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.
நன்றிப் பாடல்
திபா 4
ஆண்டவர் அவரைச் சாவினின்று உயிர்ப்பித்து எல்லாப்புகழ்ச்சிக்கும் தகுதியுடையவராக்கினார்’ (புனித அகுஸ்தினார்).
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டுவருவீர்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை
நாடிச் செல்வீர்?
ஆண்டவர் என்னைத் தம் அன்பனாய்த்
தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிந்து கொள்வீர்!
நான் மன்றாடும்போது அவர் எனக்குச்
செவிசாய்க்கின்றார்;
சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருப்பீர்.
முறையான பலிகளைச் செலுத்துவீர்;
ஆண்டவரை நம்புவீர்.
’நலமானதை எங்களுக்கு அருளை யார் உளர்?’
எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உம் திருமுக ஒளி வீசச் செய்யும்.
தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில்
மக்கள் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை
நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்;
ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நிரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, எனக்கு இரங்கி என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.
மு. மொ. 2: இரவு நேரங்களில் ஆண்டவரைப் போற்றுங்கள்.
கோவிலில் இரவு இறைவேண்டல்
திபா 134
”கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே. பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” (திவெ. 19:5)
இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில்
பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே!
நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி
ஆண்டவரைப் போற்றுங்கள்.
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவர்
சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : இரவு நேரங்களில் ஆண்டவரைப் போற்றுங்கள்.
அருள்வாக்கு
இச 6: 4-7
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப் பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
சிறு மறுமொழி
முதல்: ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
எல்: ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்: உண்மையின் ஆண்டவராகிய கடவுளே, எம்மை மீட்டவர் நீரே.
எல்: ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
முதல்: தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
எல்: ஆண்டவரே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்.
சிமியோன் பாடல்
மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.
லூக் 2: 29-32
கிறிஸ்துவே உலகின் ஒளியும் இஸ்ரயேலின் மாட்சியுமாயிருக்கிறார்.
ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.
எனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு
நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன.
இம்மீட்பே பிற இனத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளி;
இதுவே உம் மக்களாகிய இஸ்ரையேலுக்குப் பெருமை.
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.
தொடக்கத்திலே இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
மு. மொ. : ஆண்டவரே, நாங்கள் விழித்திருக்கும்போது எங்களைக் காத்தருளும்; நாங்கள் தூங்கும்போது எங்களைப் பாதுகாத்தருளும். இதனால் கிறிஸ்துவோடு விழித்திருந்து அவரோடு அமைதியில் இளைப்பாறுவோம்.
இறுதி மன்றாட்டு
ஆண்டவரே, இவ்விரவில் எங்களைச் சந்திக்க வாரும்; இதனால் உம் மகனாம் கிறிஸ்துவின் உயிர்ப்பில் அக்களித்து உமது ஆற்றலால் வைகறையில் நாங்கள் துயிலெழுவோமாக. உம்மோடு என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
எல்: ஆமென்.
ஆசியுரை
ஆண்டவர் நமக்கு ஓர் அமைதியான இரவையும் நிறைவான முடிவையும் தந்தருள்வாராக. ஆமென்.
தூய மரியாவுக்குப் பாடல்
வாழ்க அரசியே, தயைமிகு அன்னையே
வாழ்வே, இனிமையே, தஞ்சமே வாழ்க.
தாயகம் இழந்த ஏவையின் மக்கள்
தாயே என்றுமைக் கூவி அழைத்தோம்.
கண்ணீர்க் கணவாய் நின்றும்மை நோக்கிக்
கதறியே அழுதோம், பெருமூச்செறிந்தோம்.
அதலால் எமக்காய்ப் பரிந்துரைப் பவரே
அன்புடன் எம்மைக் கடைக்கண் பாரீர்.
உம்திரு வயிற்றின் கனியாம் இயேசுவே
இம்மை வாழ்வின் இறுதியில் காட்டுவீர்.
கருணையின் உருவே தாய்மையின் கனிவே
இனிமையின் அன்னை மரியா போற்றி! ஆமென்.
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook: https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment