பொதுக்காலம் 34ஆம் வாரம் - செவ்வாய்
முதல் வாசகம்
உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20
சகோதரர் சகோதரிகளே,
யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.
மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.
மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 10. 11-12. 13 (பல்லவி: 13b)பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 2: 10அல்லேலூயா, அல்லேலூயா! இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11
அக்காலத்தில்
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும், ‘காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.
மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவனை வரவேற்க நம்மைத் தயார் செய்வோம்!
பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில் நாம் இருக்கிறோம். திருவருகைக் காலத்திற்கு நம்மையே தயார் செய்யும்விதமாக இந்த வாரம் முழுதும் நாம் சிந்திக்கின்ற வாசகங்கள் அனைத்தும் நமக்கு உதவுவதாய் உள்ளன. மானிட மகனின் வருகையை எதிர்கொள்ளவும் அவர் வரும் போது நம்மைச் சுற்றி ஏற்படும் அடையாளங்களைப் புரிந்து கொண்டு நம் வாழ்வைச் சீரமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி நமக்குக் கூறும் செய்தியும் இதுவே.மானிட மகனின் வருகை நாம் நினையாத நேரத்தில் இருந்தாலும் அது நிகழும் முன்பு பல அடையாளங்களும் அறிகுறிகளும் உண்டாகும்.அவை நமக்குத் தரப்படுவது எதற்காக? நாம் கறிஸ்துவின் வருகைக்காக நமது மீட்புக்காக நம்மையே சரியான விதத்தில் தகுதியான முறையில் தயார் படுத்திக் கொள்வதற்காக.இதை நாம் புரிந்து கொண்டு நம் வாழ்வின் பாதையை சீரமைக்க வேண்டும்.
இன்று தாய் திருஅவையோடு இணைந்து புனித செசிலியாவின் விழாவை நாம் கொண்டாடுகிறோம். இவர் பாடகர்குழுவின் பாதுகாவலியாகத் திகழ்கிறார்.இதற்கு காரணம் அவர் சிறுவயதிலிருந்தே இசையில் தேர்ச்சி பெற்று இறைவனைப் பாடி புகழ்வதில் ஆர்வமுள்ளவராய் இருந்தார். உரோமையில் வேதகலாபனை காலத்தில் வாழ்ந்த இவர், இறைவன்பால் அதிக பற்றுள்ளவராய் இருந்தார். சிறுவயதுமுதலே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்திருந்தார். விருப்பமில்லாமல் கட்டாய்த்தின் பேரில் வலேரியன் என்னும் இறையச்சமில்லாதவரை மணமுடித்தார். ஆயினும் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டால் தன் கணவரையும் நம்பிக்கையாளராக மாற்றினார். அதன் விளைவாக வலேரியனின் சகோதரனும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். தூய உள்ளத்தோடு கிறிஸ்துவுக்கு பணிபுரிந்தனர் இவர்கள் மூவரும்.
தன்னுடைய நம்பிக்கை வாழ்வால் உரோமை மன்னரை கடவுளாக வழிபட்ட பலருடைய மனங்களை கிறிஸ்துவின் பால் திருப்பினார். அவரும் மன்னர்களையும் சிலைகளையும் வணங்க மறுத்தார். இதற்காக மரண தண்டனை பெற்றார். மூச்சு திணறி இறக்க வேண்டுமென்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. அதிகப்படியான நெருப்பு மூட்டப்பட்டு புகை மூட்டப்பட்ட போதும் செசிலியா இறக்கவில்லை. இறுதியில் தலை வெட்டப்பட்டது. தான் இறக்கும் தருவாயிலும் கூட இறைவனுக்கு புகழ் பாடிக்கொண்டேதான் இறந்தார். இறைவனுக்கு சாட்சியானார்.
இறைவருகைக்காக தயாரிக்க அழைக்கப்பட்டுள்ள நமக்கெல்லாம் இப்புனிதையின் வாழ்க்கை பெரும் உந்துதலாக அமைகிறது. இவர் எப்போதும் தயார் நிலையில் இருந்து தன் வாழ்வை செம்மைப்படுத்தியதோடு பிறரையும் ஊக்குவித்தார் .அதுபோல நாமும் இறைவருகைக்கு நம்மை தயார் செய்வோம். இறைவனை எப்போதும் பாடிப் புகழ்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உம்மை வரவேற்க எங்கள் வாழ்வை சீர்படுத்திக்கொள்ளவும் புனித செசிலியாவைப் போல நம்பிக்கை வாழ்வால் உமக்கு புகழ்சாற்றவும் வரமருளும். ஆமென்
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment