Sunday, December 4, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (05-12-2022)

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - திங்கள்


முதல் வாசகம்

கடவுளே வந்து உங்களை விடுவிப்பார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 1-10

பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக்குலுங்கும். அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்.

தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.”

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.

அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழி வரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றும் உள்ள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: எசா 35: 4d)

பல்லவி: இதோ நம் இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, மாநிலத்தின் ஆண்டவராம் அரசர் வருவார், அவரே நமது அடிமைத்தனத்தின் நுகத்தடியை அகற்றிடுவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இன்று புதுமையானவற்றைக் கண்டோம்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26

ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.

அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர்.

அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.

இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.  


நம் நம்பிக்கையின் ஆழத்தை சோதித்தறிவோமா?

மூளைவளர்ச்சி இல்லாத பெண் பிள்ளைகள் நான்கு பேரை ஒரு அருட்சகோதரி,டெல்லியில் தேசிய அளவிலே நடைபெற இருந்த சிறப்பு ஒலிம்பிக்  ஓட்டப்போட்டிக்காக பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அவர்கள் செல்ல வேண்டிய நாள் வந்த போது பயிற்சி அளித்த அந்த சகோதரி அவர்களுடன் செல்ல இயலாத காரணத்தால் அவர்களை மனதளவில் நன்கு தயார் செய்ய வேண்டும் என விரும்பினார். அப்போது அவர்கள் நால்வரையும் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். "உங்களுக்குள் இருந்து யார் ஓடப்போகிறார்?" என்பதுதான் அக்கேள்வி. அடுத்த நிமிடமே அந்நான்கு மாணவிகளுமே "இயேசப்பா" என்று பதிலளித்தனர். உடனே அந்த சகோதரி "நீங்கள் தான் பதக்கம் வெல்வீர்கள்" என்று வாழ்த்தி அனுப்பினார். அந்த நால்வருள் ஒரு மாணவி தங்கப் பதக்கம் வென்று, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற போட்டிக்குத் தகுதி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதாகவும் தன் பகிர்விலே கூறினார். உண்மையான நம்பிக்கை நம்மிடமிருந்து பிறருக்கும் கடந்து சென்று இயேசுவை அனுபவிக்கச் செய்யும் என தான் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார் அச்சகோதரி.

ஆம் இன்றைய வாசகங்கள் நாம் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் ஆழத்தை  சோதித்தறிய நம்மை அழைக்கிறது. நற்செய்தி வாசகத்தில் நாம்  மனதை நெகிழச் செய்யும் நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். பிறர் நலனுக்காக நாம் நம்பிக்கையோடு செய்யும் இறைவேண்டலும் முயற்சிகளும் நிறைவான பலனைத் தருகிறது என்பதை அந்நிகழ்வு மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. 

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவரை கட்டிலோடு  சுமந்து வந்த நால்வரும் இயேசுவைப் பற்றியும் அவர் ஆற்றிய அருள் அடையாளங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பார்கள். நம்பிக்கையும் கொண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கையை தங்களோடு வைத்துக் கொள்ளாமல் படுக்கையிலிருந்த தம் அயலாருக்கும் அளித்து அவரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். கூரையைப் பிரித்து அவரை கீழிறக்கினார்கள் என வாசிக்கிறோம். அப்படியென்றால் அவர்களின் ஆழமான நம்பிக்கையை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நம்முடைய நம்பிக்கை இந்த அளவுக்கு ஆழமானதா என ஆராயவும் வேண்டும். நலம்பெற்ற மனிதரும்  இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டதால்தான் தன்னைத் தூக்கி வந்த மனிதர்களின் முயற்சிகளுக்கு இசைவு அளித்தார். அத்தோடு நின்று விடாமல் "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என மொழிந்த இயேசுவின் வார்த்தைகளை நம்பி ஏற்றுக்கொண்டார். நலம் பெற்றார். 

கடவுள் மேல் உண்மையான, ஆழமான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கும் பொழுது அந்நம்பிக்கை நம்மோடு நின்றுவிடாது. அது மற்றவர்களின் நம்பிக்கையையும் மிகுதிப்படுத்தும். அவர்கள் வாழ்வையும் முன்னேற்றும். இத்தகைய நம்பிக்கையில் தான் நாம் திருப்பலியிலும், நம்முடைய தனிப்பட்ட இறைவேண்டலிலும் பிறருக்காக மன்றாடுகிறோம். பிறர் நோய்வாய்ப்படும் போதோ அல்லது பிரச்சனைகளில் இருக்கும் போதோ "உங்களுக்காக ஜெபிக்கிறேன்" என கூறுகிறோம்.பிறரும் நம்மிடம் "எனக்காக ஜெபியுங்கள்" என கேட்கிறார்கள். இவ்வாறு செய்வதால் கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாமும் வளர்வதோடு பிறரும் வளரத் துணை செய்கிறோம். இதுதான் ஆழமான நம்பிக்கையின் அடையாளம்.


இன்றைய முதல் வாசகம் மெசியாவின் வருகையின் போது சோர்ந்த உள்ளங்களெல்லாம் தேற்றப்படும், நோய்பிணிகளெல்லாம் நலமாகும் என்ற கருத்தினைக் கூறுகிறது. மெசியா வந்து தீமைகளைப் பழிதீர்ப்பார். நன்மைகளால் தம் மக்களை நிரப்புவார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் அவருக்காக இஸ்ரயேல் மக்கள் காத்திருந்தனர். வரவிருக்கும் மெசியா தங்கள் மனமாற்றத்தை ஏற்றுக்கொண்டு பாவங்களை மன்னித்து மீட்பளிப்பார் என எதிர்நோக்கியிருந்தனர்.

திருவருகைக் காலத்தில் ஆண்டவர் இயேசுவின் பிறப்புக்காகவும் அவரின் இரண்டாம் வருகைக்காகவும் நம்மையே தயார் செய்யும் நாமும் இஸ்ரயேல் மக்களிடமிருந்த அதே நம்பிக்கையைக் கொண்டவர்களாய் நம்பிக்கையில் நாளும் வளர்வோம்.ஒருவருக்கொருவர் நம்பிக்கையூட்டுவோம். நம் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.

 இறைவேண்டல் 

நம்பிக்கையால் எமக்கு நலமளிக்கும் இறைவா! எம் நம்பிக்கையின்மையைப் போக்கும். நாங்கள் உம்மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும், மற்றவரையும் உம்மீது  நம்பிக்கை கொள்ளத் தூண்டவும் இதனால் உம்மக்கள் நாங்கள் ஒருசேர நம்பிக்கையோடு உம்மை வரவேற்கவும் அருள் தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

No comments:

Post a Comment

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (31-01-2023)

  பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுக...