திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - செவ்வாய்
முதல் வாசகம்
இறைவன் தம் மக்களைத் தேற்றுகிறார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11
“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.
“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்; “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 96: 1-2. 3,10. 11-12. 13 (பல்லவி: எசா 40: 10a)பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
தேற்றிடும் கடவுளிடம் திரும்பிச் செல்வோம்!
ஆறுதலும் தேறுதலும் ஒரு மனிதனுக்கு வாழ்வில் மிக மிக அவசியமானது. துன்ப துயர நேரத்தில் நம்மைத் தேற்றிட நம் மனப்புண்களை ஆற்றிட யாராவது முன்வந்தால் அவர்களை நம் வாழ்நாளின் இறுதி வரை மிகப்பெரிய இடத்தில் வைத்திருப்போம் அல்லவா. மனிதர்களின் ஆற்றுப்படுத்துதலுக்கு இத்தகைய பலனும் மதிப்பும் உண்டெனில் இறைவன் நம்மைத் தேற்றும் போது நாம் அடையும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை எனலாம். இதை நாம் உணர்கிறோமா? அல்லது அவரிடமிருந்து விலகிச் செல்கிறோமா?
இன்றைய இரு வாசகங்களும் நமக்கு நம்மைத் தேற்றிடும் இறைவனின் பாசத்தையும் அவர் நம்மைத் தேடித் தேடி அன்பு செய்கிறார் என்ற உறுதியையும் தருவனவாக இருக்கின்றன. முதல் வாசகத்தில் பாவங்களை எல்லாம் மன்னித்து தன் மக்களுக்கு ஆறுதல் வழங்கும் இறைவனை நாம் காண்கிறோம். "இதோ உன் கடவுள் " என பிறர் முன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய சொல்கிறார் இறைவன். இதன் பொருள் என்ன? எப்போதும் எல்லா காலத்திலும் தன் மக்களைத் தேற்றிடும் தெய்வமாக அவர் உடனிருக்கிறார் என்பதே அதன் பொருள்.
இன்றைய நற்செய்தியிலும் தன்னிடமுள்ள நூறு ஆடுகளில் வழி தவறிச் சென்ற ஆட்டினை தேடிச் சென்று மீட்டு மகிழ்ந்து களிகூறும் நல்ல ஆயனுக்கு விண்ணகத்தந்தை ஒப்பிடப்படுகிறார். தன் மக்களுள் ஒருவரும் நெறி தவறக் கூடாது என்று என்னும் நம் தந்தை அவ்வாறு நெறிதவறினாலும் கூட அவராகவே அன்போடு தேடி வந்து மன்னித்து தேற்றுகிறார் . என்னே நம் தந்தையின் அன்பு!
நாம் கொண்டாடப் போகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மைப் பொருளை இப்பகுதி ஆழமாகக் கூறுகிறது. ஆம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையிலிருந்து நெறிதவறி தொலைந்து போன ஆட்டைப் போன்று வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைத் தேடி வந்த விண்ணக இறைவனின் மண்ணக அவதார விழா இது. இத்தகைய கடவுளின் தேறுதலையும் ஆறுதலையும் இன்னும் அதிகமாக உணர நாம் செய்ய வேண்டியது என்ன ? . அவரிடம் திரும்பிச் செல்வது தானே. நாம் திரும்பிச் செல்ல நினைத்த மறுகணத்தில் அவர் நம்மை கண்டடைந்து விடுவாரன்றோ! இதை உணர்வோம். அவரிடமே திரும்புவோம்.
இறைவேண்டல்
தேற்றிடும் தெய்வமே!எம்மைத் தேடிவந்து மீட்டருளும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment