பொதுக்காலம் 2ஆம் வாரம் - வியாழன்
இயேசு தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்து, எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றினார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25- 8: 6
சகோதரர் சகோதரிகளே,
இயேசு தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்துபேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.
இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார். திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.
இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.
ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும். உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள். இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது, “மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள்” என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப் பணியைவிட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார்.
ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையை விடச் சிறப்பு மிக்கது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 40: 6-7a. 7b-8. 9. 16 (பல்லவி: 7a, 8b)பல்லவி: என் கடவுளே, உமது திருவுளம் நிறைவேற்ற வருகின்றேன்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 திமொ 1: 10bஅல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
“இறைமகன் நீரே” என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12
அக்காலத்தில்
இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.
ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நமது பணி மக்கள் மையப் பணியா!
இயேசு மக்கள் நலப்பணிக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார். தான் இறையாட்சிப் பணிசெய்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற இறையாட்சி பணிகளைச் செய்துள்ளார். ஒரே தந்தையின் பிள்ளைகளும் இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய நமக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கின்றார். தன்னோடு வாழக்கூடிய மக்களுக்கு பணி செய்வது வாழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசுவின் இயல்பாக இருந்தது. அவருடைய சொல்லும் செயலும் மக்களுக்கு நலமான வாழ்வை வழங்கியது.
இயேசு எண்ணற்ற மக்களை குணம் பெறச் செய்ததால் நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று இயேசு மீது விழுந்து கொண்டிருந்தனர் என இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஏராளமான மக்கள் இயேசுவின் போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும் கேள்வியுற்றும் அவரைப் பின்பற்றினர். இயேசு அவர்கள் மீது பரிவு கொண்டு நம்பியவர்களை கைவிடாமல் குணமளித்தார். இதன் வழியாக அவர்களுக்கு புது வாழ்வை வழங்கினார்.
இயேசுவின் வாழ்வு இரண்டு வகையான பணிகள் வழியாக மக்களுக்கு புது மாற்றத்தையும் புது வாழ்வையும் தந்தது. முதலாவதாக, தன்னுடைய போதிக்கும் பணியின் வழியாக மக்களை இறைநம்பிக்கையில் திடப்படுத்தி மீட்பின் கனிகளைச் சுவைக்க வழிகாட்டினார். இயேசுவின் வார்த்தை மக்களுக்கு உடல் மற்றும் ஆன்ம நலனைக் கொடுத்தது. இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்று அவரின் சீடர்களாக வாழ முன் வந்திருக்கின்ற நாம், நம்முடைய வார்த்தையால் பிறருக்கு உடல் மற்றும் ஆன்ம நலனைகக் கொடுக்க முடிகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய வார்த்தை பிறருக்கு நலம் கொடுக்க வேண்டுமென்றால் இயேசுவைப் போல நம் வாழ்வு புனிதம் நிறைந்ததாகவும், நாம் எல்லோரும் சொல்வதைச் செய்பவராகவும் செய்வதைச் சொல்பவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய வாழ்வு வாழுகின்ற பொழுது நாம் சிறந்த இறை பணியைச் செய்ய முடியும். எனவே நம்முடைய வார்த்தைகளைத் தூய்மையாக்கவும் அதன் மூலம் நம்முடைய வாழ்வைத் தூய்மையாக்க முன்வருவோம்.
இரண்டாவதாக இயேசு வல்ல செயல்கள் வழியாக சிறந்த ஒரு பணியினை செய்தார். இயேசுவுடைய வார்த்தையும் செயல்பாடும் உடனிருப்பும் நோயுற்றவர்களுக்கு குணமளித்தது. அதேபோல நம்முடைய வாழ்விலும் நாம் வாழக்கூடிய இடங்களில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உளவியல் நோயால் தங்கள் வாழ்க்கையை இழந்து சில மனிதர்கள் வாழலாம். அவர்களுக்கு நாம் நம்மாலான உடனிருப்பையும் உதவியையும் செய்கின்ற பொழுது, நாமும் குணப்படுத்துதல் பணியினைச் செய்ய முடியும். நாம் வாழுகின்ற இந்த வாழ்க்கையில் நம்முடைய வார்த்தைகளும் உடனிப்பும் நம்மைத் தேடி வருபவர்களுக்கு நலமளிகின்றதா எனச் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மனநிலையில் எந்நாளும் பயணித்து ஏழை, எளிய மற்றும் நோயளர்களுக்கு நம்மாலான நற்பணிகளைச் செய்திட தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்:
வல்லமையுள்ள இயேசுவே! உம்மைப் போல நாங்கள் எம் வார்த்தையாலும் வாழ்வாலும் நலமளிக்கும் பணியினைச் செய்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment