பொதுக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி
இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6b-13
சகோதரர் சகோதரிகளே,
சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.
ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: “இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்” என்கிறார் ஆண்டவர்.
‘எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள்மீது அக்கறை கொள்ளவில்லை’ என்கிறார் ஆண்டவர்.
‘அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’ என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.’
“புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10a)பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
2 கொரி 5: 19அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19
இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.
அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவன் என்னை அழைத்ததன் நோக்கம் என்ன?
தாயின் கருவில் உருவாகும் முன்பே நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்பது இறைவன் எரேமியா இறைவாக்கினருக்கு அளித்த அழைப்பு. இவ்வழைப்பு நம்மில் பலருடைய வாழ்க்கைக்கு உரமூட்டுவதாகவும் நம் அழைத்தல் வாழ்வை திடப்படுத்துவதாகவும் அமைகிறது என்றால் அது மிகையாகாது. திருமுழுக்கு பெற்ற நாம் அனைவருமே அழைக்கப்பட்டவர்களே. பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் தன் மக்களை விடுதலையாக்க நீதித்தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் அரசர்களையும் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசு தம் பணியைத்தொடர திருத்தூதர்ளை அழைத்தார். அதே வரிசையில் நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வழைப்பின் நோக்கம் இன்றைய நற்செய்தியில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவதாக "தம்மோடு இருக்க" . கடவுளோடு இணைந்திருப்பது என்பது அவரோடு செபத்தில் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதைக் குறிக்கிறது. இது நம்மை செப வாழ்விற்கு அழைக்கிறது.
இரண்டாவதாக "அனுப்பப்படுதல்" .கடவுளோடு செபத்தில் இணைந்தால் மட்டும் போதாது. மாறாக அவரோடு உள்ள உறவை பணிவாழ்வின் மூலம் பிறருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
இருத்தலும் அனுப்பப்படுதலும் அதாவது செபவாழ்வும் பணிவாழ்வும் இணைந்து இருப்பதே கடவுள் நம்மை அழைத்ததன் நோக்கம். நாம் எல்லாருமே இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு செபவாழ்வில் இணைந்து இருந்து அவருடைய பணியை நாம் செய்ய வேண்டும். இது குருக்கள் துறவியருக்கு மட்டும் தரப்பட்டுள்ள அழைப்பல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்குமான அழைப்பு. செபவாழ்வும் பணிவாழ்வும் நம் அழைத்தலின் இருதூண்கள் என உணர்ந்து அழைத்தலுக்கேற்ற வாழ்வு வாழ முயலுவோம்.
இறைவேண்டல்
பெயர்சொல்லி அழைத்தவரே இறைவா நாங்கள் உம்மோடு இருந்து அவ்வனுபவத்தை பிறருக்கு பறைசாற்ற அனுப்பப்பட்டவர்கள் என உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி. குழந்தை இயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️
Join with us 👇
Website: https://catholicvoicecv.blogspot.com
Youtube: https://www.youtube.com/channel/UCcgIiK1gUEqRCmTsc7ZjAoA
Youtube: https://www.youtube.com/channel/UCxBBHQAKIjii_MsZfIYNF5A
Facebook:https://www.facebook.com/Catholic-Voice-108151311955076
Instagram:https://www.instagram.com/invites/contact/?i=16mmdwn460k8p&utm_content=p6lg283
No comments:
Post a Comment