Wednesday, January 25, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-01-2023)

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள்

நினைவு


முதல் வாசகம்

வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.

உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

நற்செய்தியைப் பறைசாற்றும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

அனைவருக்கும் பொதுவான விசுவாச அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை தீத்துவுக்கு, கடவுளின் பணியாளனும் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதனுமாகிய பவுல் எழுதுவது:

தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் மீட்பராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் நம்பிக்கை கொள்ளவும் நிலைவாழ்வை எதிர்நோக்கி இறைப்பற்றுக்கு இசைந்த உண்மை அறிவைப் பெறவும் நான் திருத்தூதனாய் இருக்கிறேன். இந்நிலைவாழ்வை, பொய் கூறாத கடவுள், காலங்கள் தொடங்கும் முன்னே வாக்களித்தார். ஏற்ற காலத்தில் நற்செய்தியைப் பறைசாற்றியதன் வாயிலாகத் தம் செய்தியை வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியைப் பறைசாற்றும் பணி நம் மீட்பராம் கடவுள் இட்ட கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நான் உனக்குப் பணித்தபடியே கிரேத்துத் தீவில் நீ மேலும் செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து, நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த உன்னை அங்கே விட்டு வந்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 7-8a. 10 (பல்லவி: 3a)

பல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
2a
ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி

2b
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3
பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

7
மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8a
ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். - பல்லவி

10
வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

அல்லது


பதிலுரைப் பாடல்

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6a)

பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி

3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி

5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 4: 18-19 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில்

ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு


அல்லது  


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 105

அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25

அக்காலத்தில்

இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா? வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும்.

ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 நற்செய்தியின் சுடர்களாவோம்!

இன்று நம் தாய் திருஅவையோடு இணைந்து புனித திமோத்தி மற்றும் தீத்து ஆகியோருடைய விழாவை நாம் கொண்டாடுகிறோம். இருவருமே கிறிஸ்தவ மறை பரப்புப் பணியில் தங்களுக்குரிய பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார்கள் என்பது கிறிப்பிடத்தக்கது.

புனித திமோத்தி பவுலடியாரின் இரண்டாம் மறைபரப்பு பயணத்தின் போது அவருடைய சீடராக இருந்து உடனுழைத்தவர். கிறிஸ்தவ நம்பிக்கை பரவ ஆரம்பித்த முதல் நூற்றாண்டிலேயே வாழ்ந்தவர். பவுலடியாரின் வழிநடத்துதலின் படி பணி செய்தவர். புனித பவுல் எழுதிய திருமுகங்களில் இரண்டு இவருக்காக எழுதப்பட்டவை. இவரும் மறைபரப்பு பணிக்காக சிறை தண்டனை போன்ற துன்பங்களை ஏற்றுள்ளார் என திருஅவை பாரம்பரியம் கூறுகிறது. திமோத்தேயு என்ற பெயருக்கு கடவுளைப் போற்றுபவர் என்பது பொருள்.

புனித தீத்து பவுலின் மூன்றாம் மறைபரப்பு பயணத்தில் இணைந்து கொண்டவர். இவர் புற இன கிறிஸ்தவராவார். இவர் பவுலின் போதனைகள் வழியாக ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொண்டவர். பவுலோடு இணைந்து பணியாற்றியவர். இவர் ஆயராக இருந்தபோது இவரை வழிநடத்த புனித பவுல் இவருக்காக திருமடல் எழுதினார். பவுலடியாரின் கடிதங்களில் 13 தடவை இவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு விளக்கை பிறர் பயன்பெறும் பொருட்டு விளக்குத் தண்டில் வைக்க வேண்டும் என்பதையும் நாம் பெற்றுக்கொண்டதை நம்மிடம் உள்ளதை பிறக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார். இன்று நாம் விழாக் கொண்டாடும் இவ்விரு புனிதர்களுமே தாங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தி ஒளியை உயர்த்திப் பிடித்து பிறரும் அவ்வொளியில் மகிழ வழிவகுத்தனர் என்பதே உண்மை. தங்களிடமிருந்த நம்பிக்கையை பிறருக்கும் தந்து இறையருளைப் பகிர்ந்ததால் இன்றும் நாம் அவர்களைப் புகழ்கிறோம். நாமும் நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தி ஒளியை பிறர் முன் ஒளிர்விப்போம்.

 இறைவேண்டல்
அன்புத் தந்தையே இறைவா! நற்செய்தியின் ஒளிச்சுடர்களாய் புனிதர்களான திமோத்தேயு மற்றும் தீத்து ஒளிர்ந்ததைப் போல நாங்களும் விளங்க வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Sunday, January 22, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (23-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்



முதல் வாசகம்

பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்த கிறிஸ்து, மீண்டும் ஒரு முறை தோன்றுவார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 15, 24-28

சகோதரர் சகோதரிகளே,

இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராய் இருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட, என்றும் நிலைக்கும், உரிமைப் பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின்மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பு அளிக்கிறது. அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.

மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3ab. 3cd-4. 5-6 (பல்லவி: 1a)

பல்லவி: அவரது வியத்தகு செயல்களுக்காய், புதியதோர் பாடல் பாடுங்கள்.

1
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி

2
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3ab
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி

3cd
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி

5
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 திமொ 1: 10b

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சாத்தானின் அழிவு.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

அக்காலத்தில்

எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆகவே இயேசு அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப் பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.” ‘இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது’ என்று தம்மைப்பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



பிறர் பெயரைக் கெடுக்காத நல் மனம் பெற்றுக்கொள்வோம்!

உலகில் வாழும் எல்லாரும் நல்லவர்களல்ல. அதே போல எல்லாரும் தீயவர்களுமல்ல. ஒரு மனிதன் பலம்  பலவீனம் என இரண்டையுமே பெற்றிருப்பான். இதுதான் எதார்த்தம். எனவே யாரையும் ஒன்றிரண்டு செயல்களின் அடிப்படையில் நல்லவன் என்றும் தீயவன் என்றும் நாம் தீர்ப்பிட்டுவிட முடியாது. அதேபோல நமக்கு பிடித்திருந்தால் அவர்களுக்கு நற்பெயரும் பிடிக்கவில்லை என்றால் வேறுபெயரும் நாம் கொடுத்துவிட முடியாது. 


இத்தகைய வாழ்வின் எதார்த்தமான கருத்துக்களை நமக்கு வழங்குகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு பேய்களால் பேய்களை ஓட்டுகிறார். அவரிடம் இருப்பது தீய சக்தி என பரிசேயர் விமர்சிப்பதை நாம் வாசிக்கிறோம்.


இரண்டு நாட்களுக்கு முன்பாக இயேசு இறைபணியில் ஆர்வமாய் இருந்ததை பார்த்து மக்கள் அவரை அதிகமாகப் பின்தொடர்ந்ததைக் கண்ட சிலர் அவர் மதிமயங்கி இருக்கிறார் என பெயர்கொடுத்தனர் என்பதை வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று பேய்பிடித்தவன் என்ற பெயரையும் பெறுகிறார் இயேசு. இயேசு ஏன் பிறரால் இவ்வாறு விமர்சிக்கப்படுகிறார் என சிந்தித்தால் பரிசேயர்களின் பொறாமை எண்ணம் தான் அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. பொறாமை எண்ணம் இயேசுவின் பெயரையே கெடுக்கும் அளவுக்கு அவர்களைத் தூண்டுகிறது. ஆனால் இயேசு இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.


அன்புக்குரியவர்களே!  நம்வாழ்வில் இத்தகைய நிகழ்வுகள் பல நடந்தேறியிருக்கலாம். முதலாவதாக நமது பெயர் கெடுக்கப்பட்டிருக்கலாம். அந்நிகழ்வுகள் நமக்கு பல மனவேதனைகளைத் தந்திருக்கலாம். இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது இயேசுவின் மனநிலையில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா?


இரண்டாவதாக பிறர் பெயரை நாம் கெடுத்திருக்கலாம். அச்செயல் வழியாக பிறரை நாம் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேலும் அத்தகைய எண்ணங்கள் நம்முள் எழாமல் இருக்க நம்மை பக்குவப்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா?  சிந்திப்போம். பிறர் பெயரைக் கெடுப்பது கொலை செய்வதற்கு சமம். அத்தகைய எண்ணங்களை அறவே களைந்திட ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்.


 இறைவேண்டல்

அன்பு இறைவா பிறர் பெயரைக்கெடுக்கும் பரிசேய மனநிலையைக் களைய அருள்தாரும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Saturday, January 21, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (22-01-2023)

 

பொதுக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு (இறைவாக்கு ஞாயிறு)



முதல் வாசகம்

பிற இனத்தார் வாழும் கலிலேயாவில் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 1-4

முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார்.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.

மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

இரண்டாம் வாசகம்

நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-13, 17

சகோதரர் சகோதரிகளே,

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்.

என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ, ‘நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம்.

கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-23

அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

‘‘செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதுமுதல் இயேசு, ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ‘‘என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார்; எசாயா இறைவாக்கு இவ்வாறு நிறைவேறியது.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 12-17

அக்காலத்தில்

யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது:

‘‘செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.”

அதுமுதல் இயேசு, ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” எனப் பறைசாற்றத் தொடங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


கடவுளே நம் வாழ்வின் ஒளி! 


இன்று என்னுடைய கைபேசியில் வந்த இந்த குறுந்தகவல் என் மனதைத் தொட்டது. "ஒரு ரூபாய் எழுதுகோல் பலருக்கு அறிவொளி ஊட்டுகிறது. ஒரு லட்சம் கைபேசி பலருடைய கண்பார்வையை கெடுக்கிறது " என்பதே அப்பதிவு. கைப்பேசியால் பலர் கண்ணொளியை மட்டுமல்ல அறிவொளியையும் இழக்கின்றனர் என்ற சிந்தனையைத் தருவதாக இச்செய்தி அமைந்துள்ளது. கண்ணொளியும் அறிவொளியும் ஒரு மனிதனுக்கு மிக அவசியம். இந்த செய்திக்கும் நற்செய்தி பகுதிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன். கண் பார்வை என்பது நம் வாழ்வுக்கு முக்கியம். விவிலியத்தில் கண்தான் உடலுக்கு விளக்கு எனக் கூறப்பட்டுள்ளது. உடலுக்கு ஒளி தேவை. உலகிற்கு ஒளி தேவை. அவ்வாறே நம் ஆன்ம வாழ்வுக்கு ஒளி என்பது மிக மிக அவசியம். அந்த ஒளி கடவுளைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.


இன்றைய முதல் வாசகத்தில் காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர் என மொழியப்பட்டுள்ளது. இதே வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளரும் நற்செய்தியில் உறுதிப்படுத்துகிறார். காரிருள் என்ற வார்த்தை மனிதனின் பாவ வாழ்வைக் குறிக்கிறது. போரொளி என்ற வார்த்தை கடவுளின் இரக்கத்தைக் குறிக்கிறது. ஆம் காரிருளில் வாழ்ந்த மக்கள் கடவுளின் இரக்கம் என்ற பேரொளியைக் கண்டு மீட்படைகின்றனர் என்ற ஆழமான சிந்தனையை இவ்வாசகங்கள் நமக்குத் தருகின்றன. 


என்னதான் நம்மைச் சூழ்ந்து ஒளி இருந்தாலும் நம் கண்கள் மூடி இருந்தால் நாம் இருளில் தான் இருப்போம். அதேபோல கடவுள் நமக்கு ஒளியாய் இருந்தாலும் நாம் மனம் திறந்தால்தான் அவருடைய ஒளி நம் உள்ளங்களை நிரப்பும். அதற்கான ஒரு அரைகூவலாகவும் இந்நற்செய்தி அமைகிறது.  ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில்  விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று இயேசு பறைசாற்றினார் என நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் கடவுள் என்னும்  ஆன்ம ஒளி நம் உள்ளங்களை நிரப்ப  மனம்மாற்றம் என்னும் திறவுகோல் தேவைப் படுவதை உணர்த்துகிறதல்லவா.


அன்புக்குரியவர்களே!  இன்றைய பதிலுரைப்பாடலிலே ஆண்டவரே என் ஒளி ,அவரே என் மீட்பு என நாம் தியானிக்கிறோம். அவரை  நம் ஒளியாக மீட்பாக நாம் அனுபவிக்க வேண்டுமெனில் நம் மனதை அவரிடம் திருப்பி அவருடைய ஒளி நம்முள்ளங்களில் பாய்ந்தோட அனுமதிக்க வேண்டும். அப்போது பாவம், பலவீனம், அடிமைத்தனம், உலக இயல்பு எனும் காரிருளில் வாழ்கின்ற நம் இதயங்களும் நிச்சயம் பேரொளியைக் காணும் என்பதில் ஐயமில்லை. சிந்திப்போம். மனம்மாறுவோம்.


 இறைவேண்டல் 

பேரொளியாம் இறைவா எம் உள்ளத்தின் காரிருளை உம் ஒளியால் அகற்றுவீராக. ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, January 19, 2023

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (20-01-2023)

 

பொதுக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி


முதல் வாசகம்

இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6b-13

சகோதரர் சகோதரிகளே,

சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது.

ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: “இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்” என்கிறார் ஆண்டவர்.

‘எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள்மீது அக்கறை கொள்ளவில்லை’ என்கிறார் ஆண்டவர்.

‘அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’ என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.’

“புதியதோர் உடன்படிக்கை” என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10a)

பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்.

7
ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல் விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 5: 19

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.

 மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.

அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ‘இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இறைவன் என்னை அழைத்ததன் நோக்கம் என்ன? 

தாயின் கருவில் உருவாகும் முன்பே நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் என்பது இறைவன் எரேமியா இறைவாக்கினருக்கு அளித்த அழைப்பு. இவ்வழைப்பு நம்மில் பலருடைய வாழ்க்கைக்கு உரமூட்டுவதாகவும் நம் அழைத்தல் வாழ்வை திடப்படுத்துவதாகவும் அமைகிறது என்றால் அது மிகையாகாது. திருமுழுக்கு பெற்ற நாம் அனைவருமே அழைக்கப்பட்டவர்களே. பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் தன் மக்களை விடுதலையாக்க நீதித்தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் அரசர்களையும் அழைத்தார். புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் இயேசு தம் பணியைத்தொடர திருத்தூதர்ளை அழைத்தார். அதே வரிசையில் நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வழைப்பின் நோக்கம் இன்றைய நற்செய்தியில் மிகத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவதாக "தம்மோடு இருக்க" . கடவுளோடு இணைந்திருப்பது என்பது அவரோடு செபத்தில் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதைக் குறிக்கிறது. இது நம்மை செப வாழ்விற்கு அழைக்கிறது.


இரண்டாவதாக "அனுப்பப்படுதல்" .கடவுளோடு செபத்தில் இணைந்தால் மட்டும் போதாது. மாறாக அவரோடு உள்ள உறவை பணிவாழ்வின் மூலம் பிறருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். 


இருத்தலும் அனுப்பப்படுதலும் அதாவது செபவாழ்வும் பணிவாழ்வும் இணைந்து இருப்பதே கடவுள் நம்மை அழைத்ததன் நோக்கம். நாம் எல்லாருமே இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு செபவாழ்வில்  இணைந்து இருந்து அவருடைய பணியை நாம் செய்ய வேண்டும். இது குருக்கள் துறவியருக்கு மட்டும் தரப்பட்டுள்ள அழைப்பல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்குமான அழைப்பு. செபவாழ்வும் பணிவாழ்வும் நம் அழைத்தலின் இருதூண்கள் என உணர்ந்து அழைத்தலுக்கேற்ற வாழ்வு வாழ முயலுவோம்.


 இறைவேண்டல் 

பெயர்சொல்லி அழைத்தவரே இறைவா நாங்கள் உம்மோடு இருந்து அவ்வனுபவத்தை பிறருக்கு பறைசாற்ற அனுப்பப்பட்டவர்கள் என உணர்ந்து வாழ வரமருளும். ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...