Sunday, November 27, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-11-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - திங்கள்



முதல் வாசகம்

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் ‛புனிதர்’ எனப்படுவர்.

என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார். சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8
“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 80: 3

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார்

ஆண்டவரின் அருள்வாக்கு.


வியப்புக்குரிய நம்பிக்கை என்னிடம் உள்ளதா? 

நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால் ஏற்படும் உளம் சார்ந்த வெளிப்பாடு.இந்த நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது. எத்தனை முறை நாம் நம்பிக்கையைப் பற்றி சிந்தித்தாலும் நம்பிக்கையின் பொருளை ஒருவராலும் சரியாக முழுமையாக வரையறுக்க இயலாது. ஏனெனில் நம்பிக்கை என்பது கண்களுக்கு புலப்படுவது அல்ல. உள்ளத்தால் உணர்ந்து செயல்படுத்தக் கூடியது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னே நகர்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைவது நம்பிக்கை எனலாம்.


திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தின் திங்கள் கிழமையன்று நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அழைப்பு இறைவனை எதிர்கொள்ள இறை  நம்பிக்கையில் வளரவேண்டும் என்பதே.அதுவும் இறைவனே வியக்கத்தக்க வகையில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற மேலான அழைப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது. திருவருகைக் காலத்தின் சாராம்சமே விழிப்பாகவும் ஆயத்தமாகவும் மானிட மகனை எதிர்கொள்ளக் காத்திருத்தலே. இந்த காத்திருப்பில் நம்பிக்கை இல்லாது போனால் அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இல்லாது போய்விடுமன்றோ.

இன்றைய நற்செய்தியானது நாம் வியக்கத்தக்க இறைநம்பிக்கையில் வளர "நூற்றுவர் தலைவனை "நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் தந்துள்ளது. அவரின் நம்பிக்கையை இயேசு வியக்க காரணம் என்ன? நீர் என் இல்லத்திற்கு வரவேண்டாம். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் எனறு நூற்றுவர் தலைவன் கூறியதா? அல்லது யாவே இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாத புற இனத்தார் அந்த இறைவனையே போதிக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு உதவி கேட்ட செயலா?

இவற்றையும் தாண்டிய ஒரு அருங்குணம் நூற்றுவர் தலைவனிடம் உள்ளது. நான் வருகிறேன் என்று இயேசு சொன்ன போதும் தன் தகுதியற்ற நிலையை இயேசுவிடம் கூறினார் அந்த நூற்றுவர் தலைவன். இதிலென்ன வியப்பு இருக்கிறது என நாம் யோசிக்கலாம். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படையாய்க் கூறிய பின்னரும் இயேசு தன் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நூற்றுவர் தலைவனின் துணிச்சலான உறுதியான  நம்பிக்கையே இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது.

ஆண்டவரே என் உள்ளத்தில் நீர் வர நான் தகுதியற்றவன் என ஒவ்வொருமுறையும் திருப்பலியில் நாம் அறிக்கையிட்டு, நம் நிலையை உணர்ந்தவர்களாய் இயேசு நம்மை நிராகரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நாம் அவரை உட்கொள்கிறோமே! நம்மையும் பார்த்து இயேசு நிச்சயம் வியப்பாரன்றோ! இதை நாம் என்றாவது உணர்ந்ததுண்டா?

அன்புக்குரியவர்களே வியக்கத்தக்க நம்பிக்கை இதுதான். தகுதியற்ற நமக்கும் இயேசு தன் மனதைத் திறப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் அவரை அணுகினால் நமக்கு அவர் எல்லாம் செய்வார். ஆண்டவர் பிறப்புக்காய் ஆயத்தம் செய்யும் நாம் தகுதியற்ற நம் நிலையை தாழ்ச்சியோடு அவரிடம் கூறி அவரை அழைத்தால் நம் உள்ளங்களில் அவர் நிச்சயம் பிறப்பார். அதனால் நம் வாழ்வு மாறும்.இத்தகைய நம்பிக்கையில் நாம் வளர முயலுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இறைவா நாள்தோறும் நாங்கள் நீரே வியக்கும் அளவுக்கு நம்பிக்கையில் வளர துணை செய்யும் ஆமென்.

அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Saturday, November 26, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (27-11-2022)

 

திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

இறையரசின் முடிவில்லா அமைதியில் நாடுகள் அனைத்தையும் ஆண்டவர் ஒன்றுசேர்க்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:

இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.

வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ‘புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.

அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1
‘ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்’ என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.
2
எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். - பல்லவி

4
ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5
அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். - பல்லவி

6
எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!” - பல்லவி

8
“உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9
நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நமது மீட்பு மிக அண்மையில் உள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-14

சகோதரர் சகோதரிகளே,

இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது.

இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விழிப்பாயிருங்கள்; ஆயத்தமாயிருங்கள்.

 மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 37-44

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 விழிப்பாயிருங்கள்!


திருவருகைக்காலம் என்பது 'Advent' என்னும் இலத்தீன் மொழிப் பெயர்ப்பிலிருந்து "வருகை" எனப் பொருள் பெறுகின்றது. திருவருகைக்காலம் திருவழிபாட்டு ஆண்டின் தொடக்க காலம் ஆகும். இன்றைய நாளில் திருவழிபாட்டில் புத்தாண்டை கொண்டாடுகிறோம். எனவே இன்றைய நாள் நம்முடைய ஆன்மீக வாழ்வை புதுப்பித்து விழிப்போடு வாழ அழைப்பு விடுக்கின்றது. திருவருகைக்காலம் இரண்டு வகையான இயல்பைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு பெருவிழாவைத் தகுதியான உள்ளத்தோடு கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இரண்டாவதாக ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்தி அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுக்கின்றது.


நம்முடைய அன்றாட வாழ்வில் விழிப்பாய் இருந்து ஆயத்தப்படுத்துதல் என்பதைச் சிந்திக்கின்ற பொழுது பல நேரங்களில் நாம் விழிப்போடு இல்லாததால்தான் வாழ்வில் பல துன்பங்களையும் தோல்விகளையும் சந்திக்கின்றோம் என்பதை உணர முடிகிறது. எனவேதான்  ஆண்டவர் இயேசு இன்றைய நாளிலே ''விழிப்பாயிருங்கள். ஏனெனில்  ஆண்டவர் 

எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது'' என்று இன்றைய நற்செய்தியில் விழிப்போடு இருத்தலின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.   நம்மைப் படைத்த கடவுள் நாம்  தூயோர்களாக வாழ்ந்து மீட்பின் கனிகளைச் சுவைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அதற்கு அடிப்படையாக இருப்பது விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்துவதாகும். தாய்த்திருஅவையால் இதற்காகக் கொடுக்கப்பட்ட உன்னதமான காலம்தான் இந்த திருவருகைக்காலம்.


திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் ''விழிப்பாயிருங்கள்'' என்னும் செய்தி அறிவிக்கப்படுகிறது. அதுபோலவே, திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் விழிப்பாயிருக்க அழைக்கப்படுகிறோம். ''விழிப்பு'' என்றால் கண்துஞ்சாமல் இருப்பது என்பது முதல் பொருள். அதே நேரத்தில் ஒவ்வொருவரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றுவதில் ஈடுபட்டிருப்பதும் ''விழிப்பாயிருத்தலோடு'' நெருங்கிப் பிணைந்ததாகும்.அதுமட்டுமல்லாது  திருடன் வருவதாகக் கேள்விப்பட்ட பின் அவனிடமிருந்து தன் உடைமைகளைக் காப்பாற்றி கொள்ள ஒரு வீட்டு உரிமையாளர் எவ்வளவு விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருப்பாரோ அந்த அளவுக்கு நாம் கண்ணும் கருத்துமாக இருந்து நம் ஆன்ம வீட்டைக் காத்துக்கொண்டு ஆண்டவரை எதிர்கொள்ள வேண்டும்.


விழிப்பாக இருத்தல் என்பது எந்த நேரத்திலும் மனம் தளராது, எதிர்பார்ப்புடன் வாழ்தலே ஆகும்.  நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் இடையூறுகள் வந்தாலும் தடைகள் வந்தாலும் நாம் நம் ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற நற்செய்தி மதிப்பீடுகளின் படி வாழ்ந்து இறையாட்சிக்கு சான்று பகர்ந்து நம்மையே ஆயத்தப்படுத்தும் பொழுது மண்ணுலகில் நாம் துன்பப்பட்டாலும் விண்ணுலகில் மிகுந்த கைமாறு பெற்று புனிதரின் கூட்டத்தில் இணைந்து கடவுளை நேருக்கு நேராக கண்டு நிறைவான வாழ்வு பெற முடியும். இத்தகைய நிலையை அடைந்து மீட்பின் கனியை சுவைக்க கடவுள் கொடுத்த வாய்ப்புதான் இந்த உலக வாழ்வு.  இந்த உலக வாழ்வு ஒரு நிலையற்ற வாழ்வு. இந்த நிலையற்ற வாழ்விலே நாம் இவ்வுலகம் சார்ந்த பணம் பட்டம் பதவி ஜாதி இன வேறுபாடு போன்றவற்றிற்கு மதிப்பளிக்காமல் இறையாட்சியின் மதிப்பீடான மனிதத்திற்கும் மனித நேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது நாம் மீட்பின் கனியைச் சுவைக்க முடியும். இதன் வழியாக கடவுளுக்கு உகந்த வகையிலேயே வாழ்ந்து விழிப்போடு நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 


 விழிப்போடு எவ்வாறு ஆயத்தப்படுத்துவது? என்பது பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமைகளை செய்வது வழியாக நான் விழிப்போடு இருக்க முடியும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கடமைகளை செய்வதற்கு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் மாணவராக  இருந்தபொழுது போதிய பணம் இல்லாததால் படிக்கக் கூட வசதி இல்லாமல் இருந்தார். ஆனால் அவற்றை தடையாக கருதாமல் எப்படியாவது படித்து வாழ்வில் முன்னேறுவேன் என்ற ஆழமான நம்பிக்கையோடு தன்னுடைய கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்தார். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினார். இதன் வழியாக மிகச் சிறந்த வெற்றியாளராக மாறினார். இதுதான் மனித வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றது. நம்முடைய கிறிஸ்தவ வாழ்விலும் நமக்கு கொடுக்கப்பட்ட கடமைகளில் உண்மையோடும் நேர்மையோடும் செயல்படுகின்ற பொழுது, நிச்சயமாக வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்த முடியும். 


இரண்டாவதாக நம் குறைகளை அறிந்து விழிப்போடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நாம்,  நம்முடைய பாவங்களை ஏற்று மனம் வருந்த முயற்சி செய்வோம். தொடக்கத்தில் காயின் தான் செய்த பாவத்தை கடவுளுக்கு முன்பாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. எனவே கடவுளின் ஆசியை இழந்தார். காயீனைப் போல இன்றைய காலக்கட்டத்தில் நம்மோடு வாழக்கூடிய எத்தனையோ மனிதர்கள் தன்னுடைய குற்றங்களை ஏற்காமல் தங்களையே நேர்மையாளராக நியாயப்படுத்தி வருகின்றனர்.நாமும் கூட பல வேளைகளில் இம்மனநிலையைப் பெற்றிருக்கிறோம். இத்தகைய நிலையை அகற்றும் பொழுது தான் நாம் கடவுளுக்கு உகந்த வகையில் நம்மை ஆயத்தப்படுத்த முடியும்.


மூன்றாவதாக கடவுளோடு இணைந்திருத்தல் வழியாக நாம் விழிப்போடு வாழ முடியும். "கிளைகள், திராட்சைச் செடியோடு இணைந்திராவிடில் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தால் அன்றி கனி தர இயலாது " (யோ: 15: 4) என்ற இறைவசனம் கடவுளோடு இணைந்திருப்பது வழியாக நாம் நம்மையே அவரின்  வருகைக்காக ஆயத்தப்படுத்த முடியும் என்ற சிந்தனையை வழங்குகின்றது.  நம்முடைய செபத்தின் வழியாகவும் தவத்தின் வழியாகவும் மனிதநேய செயல்பாடுகள் வழியாகவும் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து அவருக்கு வந்த பிள்ளைகளாக நாம் வாழ முடியும். எனவே திருவருகைக் காலத்தில் நம்முடைய செப வாழ்வை அதிகப்படுத்துவோம். நம்முடைய அன்பை வெளிப்படுத்தி நம்மோடு வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பல செய்து அவர்களின் மகிழ்ச்சியில் பாலன் இயேசுவை கண்டு அகமகிழ முயற்சி செய்வோம்.  தவ வாழ்வின் வழியாக கடவுளின் உடனிருப்பை உணர்வோம் . இவ்வாறாக கடவுளோடு இணைந்திருப்பதன்  வழியாக கடவுளின் வருகைக்காக விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்த முடியும். 


திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கின்ற நாம், விழிப்போடு நம்மை தேடி  மீட்க வருகின்ற ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு நம்மையே ஆயத்தப்படுத்த முன்வருவோம். "கடந்தது கடந்துவிட்டது, எதிர்காலம் நமது கையில் இல்லை, நிகழ்காலம் நம்முடையது" என்ற வார்த்தைகளைப் புரிந்து கொண்டு நாம் பிறருக்குப் பலன் கொடுக்கும் வகையில் அன்போடு நன்மைகள் பல செய்வோம்.இரண்டாம் வாசகம் கூறுவது போல இயேசுவை அணிந்து கொள்வோம். அப்பொழுது நம்மை மீட்க வருகைதரும் இயேசுவின்   மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுக்க முடியும். அதற்கு நம்முடைய சிந்தனை, சொல், செயல், உடல், ஆவி அனைத்தையும் தூய்மையாக வைத்திருந்து விழிப்போடு நம்மை ஆயத்தப்படுத்துவோம். இத்தகைய மனநிலையோடு வாழும் பொழுது ஆண்டவர் இயேசுவின் வருகை எப்பொழுது வந்தாலும் நமக்கு பயம் இல்லை. வாழுகின்ற சான்று பகரக்கூடிய வாழ்வுக்கு நிச்சயமாக இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் கைமாறு உண்டு. எனவே விழிப்போடு நம்மையே கடவுளுக்கு உகந்த வகையில் ஆயத்தப்படுத்த தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் : 


எங்களை மீட்க வந்த பாலன் இயேசுவே! எங்களுடைய மனித பலவீனத்தை நீர் அறிந்திருக்கிறீர். நாங்கள் அவற்றை வெற்றி கொண்டு உமக்கு உகந்த வகையில் எங்களையே விழிப்போடு ஆயத்தப்படுத்த தேவையான இறையருளை தாரும். உமது  வருகையின் வழியாக இந்த உலகிற்கு நீர் கொண்டு வந்த அன்பு,   நம்பிக்கை, அமைதி, மகிழ்ச்சி, மீட்பு போன்றவற்றை நாங்களும் பெற்று பிறரும் பெற்று நிறைவான மகிழ்வைப் பெற்றிடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Friday, November 25, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (26-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - சனி

முதல் வாசகம்

இனி இரவே இராது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7

வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

பின்னர் அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 3-5. 6-7 (பல்லவி: 1 கொரி 16: 22; திவெ 22: 20b)

பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.

1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

3
ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4
பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5
கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. - பல்லவி

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
7
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு, எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


மானிட மகன் முன் நிற்க வல்லவர்களா நாம்?


ஒரு தனியார் வங்கியில் வேலைபார்க்கும் கணக்காளர் தன்னுடைய பணியில் மிகவும் நேர்மையுள்ளவராய் இருந்தார். அவருடன் பணிபுரியும் ஒருசிலர் பொய் கணக்குகள் எழுதி பிறர்  பணத்தை 

தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டனர். இவரையும் செய்யத் தூண்டினர். இவரோ தன் நேர்மையைக் காத்துவந்தார். மற்றவர்களைத் தட்டிக் கேட்டார். இவ்வங்கியில் ஒரு சில தவறுகள் நடக்கின்றன என்பதைப் பற்றி முகம் தெரியாத நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அரசு சோதனை நடத்தத் தீர்மானித்தது. தவறு செய்தவர்கள் மனம் கலங்கியது. சோதனையில் மாட்டிக்கொண்டனர்.தங்களுடைய தவறான செயல்களால் தங்களுக்கே வலை விரித்துக் கொண்டனர். ஆனால் நேர்மையானவரோ எவ்வித பயமும் கலக்கமுமின்றி தைரியமாக இருந்தார்.பிரச்சினையை துணிந்து எதிர்கொண்டைர்.பிறர் முன் நல்லவராய் விளங்கினார்.


இன்றைய நற்செய்தியில் "நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்று இயேசு சீடர்களிடத்தில் கூறுகிறார். இவ்வுலகக் கவலையினால் உள்ளம் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருக்கச் சொல்கிறார். இவ்வார்த்தைகளைத் தியானிக்கின்ற நாம் நமது உள்ளம் எதைக்குறித்து கவலை கொள்கிறது என சோதித்து அறிய வேண்டும்.


இவ்வுலகம் நமக்குப் பல இன்பங்களைத் தருகிறது. பணம் அதனால் விளைகின்ற ஆடம்பர வாழ்க்கை, பகட்டு,  மனதைத் திசை திருப்பும் அறிவியல் கண்டுபிடிப்புகள் ,மது, போதை மருந்துகள் போன்றவைகள் நமக்கு இன்பங்களைத் தந்தாலும் உண்மையான மகிழ்ச்சியைத் தருவதில்லை.  நிறைவைத் தருவதில்லை.மாறாக வாழ்வின் திசையை மாற்றுகிறது. பேராசையைத் தூண்டுகிறது. நல்லவற்றிலிருந்து நம் பாதையை மாற்றி தேவையற்றவைப் பற்றி யோசிக்கவைத்து நம் கவலைகளை அதிகரிக்கிறது. இக்கவலைகளில் மூழ்கிக்கிடக்கும் நாம் வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் மீண்டும் மீண்டும் உலக மாயைகளில் சிக்கிக் கொள்கிறோம். இவை நம் ஆன்மீக வாழ்வை மழுங்கடிக்கிறது. 


திருவருகைக் காலத்தைத் தொடங்கப்போகிறோம். ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தைத் தொடங்கும் முன்பு மனம் மாற வேண்டும். இயேசுவை உள்ளத்தில் ஏற்க வேண்டும்.அதற்காக ஆயத்தப்படுத்த வேண்டும் என்று நாம் சிந்திப்பதுண்டு. ஆனால் இவ்வுல மாயை என்ற கண்ணியில் சிக்கிக்கொண்டுள்ளதால் பலமுறை இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவர் முன் வல்லவராய் நிற்கத் தகுதியை இழந்தவர்களாகவே நாம் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம்மைத் தேடி வரும் இறைவனை எதிர் கொள்ளத் தயங்குகிறோம்.இதிலிருந்து வெளிவர நாம் இறைவன் விரும்பும் நேர்மை, உண்மை, நீதி, அன்பு இவற்றைக் கொண்டவர்களாய் இறைவேண்டலுடன் எப்போதும் அவரை எதிர் கொண்டு அவர்முன் வல்லவராய் நிற்க முயற்சி செய்ய வேண்டும். உலக மாயைகளிலும், கேளிக்கைகளிலும் நாம் கொண்டுள்ள நாட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க  நம்மால் இயன்ற முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எத்துன்பம் வந்தாலும் விழிப்பாய் இருந்து இறைவேண்டல் செய்வதைத் தொடரவேண்டும்.



அவ்வாறு நாம் முயலுகின்ற போது 

நம்முயற்சிகளை இறைவன் நிறைவாக ஆசிர்வதிப்பார். முதல்வாசகத்தில் நாம் வாசிப்பதைப் போல நம் மீது அவருடைய ஒளியை வீசச்செய்வார்.நம் வாழ்வு கனிதரும்  என்பதில் ஐயமில்லை.நம் நெற்றியில் மட்டுமல்ல நம் வாழ்விலும் இறைவனின் பெயர் பொறிக்கப்படும்.


மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராகும் படி நம்மையே நாம் தயார் செய்ய விழைவோமா? தேவையற்ற கவலை என்னும் சூழ்ச்சியிலிருந்து முழுமையாக விடுபட விழிப்பாய் இருந்து மன்றாடுவோமா?


 இறைவேண்டல் 

அன்பு இறைவா மீட்பின் கடவுளே! இயேசுவே

உலகக் கவர்ச்சிகளிலும் கலவைகளிலும் மழுங்கிக் கிடக்கும் எம் ஆன்மீக வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கிறோம். அவற்றிலிருந்து மீண்டு நாங்கள் ஒவ்வொரு நாளும் எம்மைத்தேடி வரும் உம்மை எதிர்கொண்டு உம் முன் வல்லவர்களாய் நிற்க எங்களையே ஆயத்தப்படுத்த வரம் தாரும். ஆமென்.



அருட்பணி. குழந்தை இயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர்

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு

சிவகங்கை மறைமாவட்டம்



♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Thursday, November 24, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (25-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - வெள்ளி

முதல் வாசகம்

புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 20: 1-4, 11- 21: 2

வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்; பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்; இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.

பின்பு நான் அரியணைகளைக் கண்டேன். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர். கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை; அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதும் இல்லை. அவர்கள் மீண்டும் உயிர் பெற்று, ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.

பின்பு பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்துவைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு.

வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள். பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்துகொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 84: 2. 3. 4-5a,7a (பல்லவி: திவெ 21: 3)

பல்லவி: இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது.

2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

3
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. - பல்லவி

4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5a
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
7a
அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில்

இயேசு ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

இன்றைய வாசகங்கள்(25.11.2022) 

ஆண்டின் 34ஆம் வாரம் வெள்ளி

மு.வா: திவெ: 20: 1-4,11 - 21: 2

ப.பா: திபா: 84: 2. 3. 4-5,7

ந.வா: லூக்: 21: 29-33


 காலத்தின் அறிகுறிகளின் படி வாழ்வோமா!


மனிதர்களாய் பிறந்த நாம் ஒவ்வொருவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப வாழ அழைக்கப்பட்டுள்ளோம். ''இயேசு, 'விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். 

ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா' என்றார்'' (லூக்கா 21:33) எந்த வார்த்தைகளுக்கு ஏற்ப இறைவார்த்தையின் ஒளியில் காலத்தின் அறிகுறிகளின் படி வாழும் பொழுது, நிச்சயமாக நம்முடைய வாழ்வை கடவுளுக்கு உகந்த வாழ்வாக வாழமுடியும். நான் இறையில் படித்துக் கொண்டு இருக்கின்ற பொழுது எங்களுக்கு இறையியல் எடுத்த பேராசிரியர்களில் ஒருவர் அடிக்கடி "இறையியல் என்பது சமூக பொருளாதார ஆன்மீக அரசியல் போன்றவற்றை பகுப்பாய்வு செய்து இறைவார்த்தையின் ஒளியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதே ஆகும் " என்று அடிக்கடி கூறுவார். அப்பொழுது எனக்குப் புரியவில்லை. நான் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டு பங்குத்தளத்திற்கு பணி செய்ய வந்த போதுதான் அதனுடைய ஆழமான பொருள் புரிந்தது. ஒவ்வொரு பங்கும் ஒவ்வொரு சூழலை கொண்டிருக்கும். அதேபோல நம்முடைய வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொரு சூழலை கொண்டிருக்கும். அவற்றையெல்லாம் அறிந்து இறைவார்த்தையின் ஒளியில் நம்பிக்கையோடு பயணிப்பதே வாழ்வில் வெற்றியைத் தரும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


இந்நாளில் நம் ஆண்டவர் இயேசு நற்செய்தியின் வழியாக காலத்தின் அறிகுறிகளை அறிந்து வாழ அழைப்பு விடுக்கிறார். நாம் வாழும் இந்த உலகத்தில் எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துகள், பாதிப்புகள் வருகின்றன. ஆனால் இவையெல்லாம் நமக்கு சொல்வது நாம் கடவுளின் வருகைக்காக எந்நாளும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதேயாகும். மனிதர் என்பவர் பல்வேறு சோதனைகளுக்கும் இடையூறுகளுக்கும் உள்ளாவது இயல்புதான். ஆனால் அவற்றில் மூழ்கி விடாமல் நாம் செய்கின்ற ஒவ்வொரு தவற்றிலும் அனுபவங்களைக் கற்றுக் கொண்டு இறைவார்த்தையின் பாதையில் பயணிக்க அழைக்கப்பட்டுள்ளோம்.


தாவீதின் வாழ்க்கையை நாம் ஆய்வு செய்து பார்த்தோம் என்றால் நாம் அவரின் வாழ்விலிருந்து மனமாற்றத்தில் நிலைத்திருப்பது எப்படி என்பதை பற்றி அறிந்துகொள்ள முடியும். அவர் தன்னுடைய பலவீனத்தின் காரணமாக உடல் சார்ந்த இன்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனவே ஒரு உயிரை கூட எடுக்க முன்வந்தார். பிறகு இது தவறு என்று இறைவாக்கினர் நாத்தான் வழியாக அறிந்த பிறகு தன்னை முற்றிலும் வெறுமையாக்கி தான் செய்த பாவத்திற்காக மனம் வருந்தினார். தண்டனையைப் பெற்று கடவுளுடைய மன்னிப்பைப் பெற்றபிறகு புனிதமான வாழ்வை மீண்டும் தொடங்கினார். இதுதான் நாம் செய்கிற. தவற்றிலிருந்து புதிய அனுபவத்தை பெற்றுக் கொள்வது. எனவே கடவுள் நம்முடைய அன்றாட வாழ்விலேயே பல்வேறு அறிகுறிகள் வழியாக மனம் மாறுவதற்கு அழைப்பு விடுக்கிறார். அதனைப் புரிந்து கொண்டு மனம் மாறி தூயவர்களாக வாழும் பொழுது, நிச்சயமாக கடவுளின் அளப்பரிய இரக்கத்தை பெற்று மீட்பினைச் சுவைக்க முடியும்.


உலகமே அழிந்துபோனாலும் இயேசு கூறிய ''வார்த்தைகள் ஒழியவே மாட்டா'' என்பதன் பொருள் என்ன? என சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் வார்த்தைகள் நமக்கு வாழ்வு தருகின்ற வார்த்தைகள். அந்த வார்த்தைகளின் வல்லமையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை யாரலும் முறியடிக்கவும் இயலாது. இந்நிலையில் உலகமே அழிந்து மாய்ந்துபோனாலும் இயேசுவின் வார்த்தைகள் ''ஒழியவே மாட்டா''. இயேசுவின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை இதிலிருந்து அறிகிறோம். கடவுளின் அன்பை நம்மோடு பகிர்ந்துகொள்வதற்காக இயேசு நம்மைத் தேடி இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும் அவரின் பிறப்பு பெருவிழாவை கொண்டாடுவதற்காகவும் நம்மையே தயார்படுத்திக் கொண்டிருக்கும் நாம் காலத்தின் அறிகுறிகளை அறிந்து உயிருள்ள இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் வாழ்ந்திட தேவையான அருளை வேண்டுவோம்.


 இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! எங்கள் வாழ்விலே பற்பல அனுபவங்களைக் கொடுத்து மீட்பின் கனியை சுவைக்க வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர். அதற்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து எங்கள் வாழ்வில் நீர் வெளிப்படுத்தும் அறிகுறிகளை உணர்ந்து இறைவார்த்தையின் ஒளியில் எந்நாளும் பயணித்து உமக்கு உகந்த வாழ்வு வாழ்ந்து உமது வருகைக்காக எங்களையே ஆயத்தப்படுத்தி மீட்பின் கனியை சுவைத்திட தேவையான அருளைத் தாரும்.ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️

Wednesday, November 23, 2022

Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (24-11-2022)

 

பொதுக்காலம் 34ஆம் வாரம் - வியாழன்



முதல் வாசகம்

பாபிலோன் மாநகரே, நீ வீசி எறியப்படுவாய்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 18: 1-2, 21-23; 19: 1-3, 9a

சகோதரர் சகோதரிகளே,

வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது. அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின் வருமாறு கத்தினார்: “வீழ்ந்தது! வீழ்ந்தது! பாபிலோன் மாநகர்! அவள் பேய்களின் உறைவிடமாக, அனைத்துத் தீய ஆவிகளின் பதுங்கிடமாக, தூய்மையற்ற பறவைகள் அனைத்தின் புகலிடமாக, தூய்மையற்ற வெறுக்கத்தக்க விலங்குகளின் இருப்பிடமாக மாறிவிட்டாள்.” பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்:

“பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்; நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடுவாய். யாழை மீட்டுவோர், பாடகர், குழல் ஊதுவோர், எக்காளம் முழக்குவோர் ஆகியோர் எழுப்பும் இசை இனி உன் நடுவே எழவே எழாது; தொழில் செய்யும் கைவினைஞர் அனைவரும் இனி உன் நடுவே குடியிருக்கவே மாட்டார்கள்; எந்திரக்கல் எழுப்பும் ஒலி இனி உன் நடுவே எழவே எழாது. விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது; மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது; ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்; உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றி விட்டது."

இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.” மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.

அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: திவெ 19: 9a)

பல்லவி: செம்மறியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.

1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

4
நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! - பல்லவி

5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 21: 28

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பிற இனத்தாரின் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும்.

அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும்.

மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு

இணைப்பங்கு பணியாளர் 

தூய ஆவியார் ஆலயம்

இராசசிங்க மங்களம் பங்கு 

சிவகங்கை மறைமாவட்டம்

இன்றைய வாசகங்கள்(24.11.2022) 

ஆண்டின் 34ஆம் வாரம் வியாழன்

மு.வா: திவெ: 18: 1-2, 21-23; 19: 1-3,9

ப.பா:  திபா: 100: 1-2. 3. 4. 5

ந.வா: லூக்: 21: 20-28


 *மீட்பின் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்போமா!*


இன்றைய வாசகங்கள் தீமையின் அழிவையும் இறைமகன்  வழங்கும் மீட்பையும் நமக்குச் சுட்டி க்காட்டுகின்றது. இறைமகன் மீண்டும் வரும்வேளையில் உலகத்தில் நடைபெறும் மாற்றங்களையும், இயற்கைச் சீற்றங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. இவ்வசனங்களை நாம் வாசிக்கும் போது நமக்குள் அச்சம் எழுவதை நாம் உணர்கிறோம்.மனம் கலங்குகிறோம். இவை அனைத்தும் இப்பொழுதே நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணர்கிறோம். ஆனால் ஆண்டவர் எதிர்பார்ப்பது அச்சத்தை அல்ல. நல்ல மனமாற்றத்தையே.


உலகத்தில் எப்போதுமே எதிர்மறையானவற்றிற்கிடையே போராட்டம் நடைபெறுகிறது. தீமை நன்மையை வெல்லத் துடிக்கிறது. இருள் ஒளியை ஆள நினைக்கிறது. பொய்மை உண்மையை மறைக்க எண்ணுகிறது. இப்போராட்டத்தில் தீமையானவை வெல்வது போலத் தோன்றினாலும் இறுதியில் வெல்வது நன்மையே. நீதியின் கடவுள் பொறுமையாய் இருந்தாலும் அவருடைய தீர்ப்பு நீதியாய் விளங்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.அவ்வேளையில் நாம் நீதியுள்ளவர்களாய், ஒளியின் மக்களாய் தலைநிமிர்ந்து நிற்கிறோமா? அல்லது மீட்பைச் சுவைக்கத் தகுதியற்றவர்களாய் இருக்கிறோமா? என நம்மை நாமே கடவுளின் கண்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.


இன்றைய முதல் வாசகம் பாபிலோனுக்கு வழங்கப்படும் தீர்ப்பு பற்றி நமக்கு விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையிலிருந்து விலகிச் செல்லும் போது அவர்களைக் கடவுள் பக்கம் அழைத்துவர ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நாடுதான் பாபிலோன்.கடவுள் தாமே அவர்களைத் தேர்தெடுத்தாலும் ,பாபிலோனியர்கள் கடவுளை மறந்து தீமையின் உச்ச கட்டத்திற்குச் சென்றதால் அவர்களின் தண்டனையும் உச்சத்தை எட்டுகிறது. நம்முடைய வாழ்விலும் பலசமயங்களில் நாம் தீமைக்கும் கடவுள் விரும்பாத அநீதிக்கும் துணைபோகும் போது கடவுள் நம்மைக் கண்டிப்பார் என்பதை மனதில் இறுத்த வேண்டும்.


இன்று நாம் காணும் இயற்கைச் சீற்றங்கள் யாவும் நம்முடைய அநீதியின் வெளிப்பாடுகளே. நன்மையை ஒதுக்கி தீமையின் குரலைக் கேட்டு சுயநலத்தோடு இயற்கையையும் சக மனிதர்களையும் நாம் காயப்படுத்தியதால் தான் இயற்கைப் பேரிடர்கள் நம்மை வாட்டுகின்றன.


கிறிஸ்துவின் வருகைக்காக நம்மைத் தயாரிக்கும் இவ்வேளையில் நம் வாழ்வைத் திருப்பிப் பார்ப்போம். நன்மையும், ஒளியும், நீதியும் உலகில் வெற்றிபெற நம் வாழ்வுப் பாதையை மாற்றுவோம். உண்மைக்குக் குரல் கொடுப்போம். அப்போது தலைநிமிர்ந்தவர்களாய் நம்மை நெருங்கி வந்துகொண்டிருக்கும் மீட்பை நம்மால் எதிர்கொள்ள முடியும். அதற்கான வரத்தை வேண்டுவோம்.


 இறைவேண்டல்

நீதியின் தேவனே தீயவற்றை நாங்கள் விலக்கி உண்மை ஒளி நீதியின் மக்களாக நாங்கள் வாழ்ந்து தலைநிமிர்ந்து உம் மீட்பைப் பெற்றுக்கொள்ள வரம் தாரும். ஆமென்.


♥️கத்தோலிக்க தூதன் (Catholic Voice) குடும்பத்தில் இணைந்திடுங்கள்♥️


Daily Bread - அன்றாட இறைவார்த்தைப் பகிர்வு (28-06-2025)

    முதல் வாசகம் தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15 அந்நாள்களில் ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார...